3,108 கிமீ.. ராஜஸ்தானில் யாத்திரை தொடங்கிய அசோக் கெலாட்! சட்டபை தேர்தலுக்கு காங்கிரஸ் செம பிளான்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் முதல்வராக அசோக் கெலாட் 9 நாட்களில் 3,108 கிலோமீட்டர் தொலைவுக்கு யாத்திரையை தொடங்கினார்.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சச்சின் பைலட் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுற்றி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி யாத்திரையை தொடங்கி உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ‛மிஷன் 2030' என்ற தலைப்பின் கீழ் இந்த யாத்திரை தொடங்கியது.
இன்றைய தினம் ஜெய்ப்பூரில் உள்ள பிர்லா ஆடிட்டோரியத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக ராஜஸ்தானை மாற்ற வேண்டும் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.
அதோடு இந்த யாத்திரையின்போது பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் தங்களின் குறைகளை கூறவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு யாத்திரையில் அதிகமானவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் வீடியோ கான்டெஸ்ட் நடத்தப்பட உள்ளது.
இந்த யாத்திரை என்பது இன்று முதல் மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 18 மாவட்டங்களில் யாத்திரை நடக்கிறது. ஜெய்ப்பூர், சிகர், சுரு, நாகார், ஹனுமன்கார்க், ஹகஞ்காநகர், பிகனீர், ஜெய்சல்மார், பார்மர், ஜோத்பூர், பாலி, சிரோஹி, ஜாலோர், ராஜ்சமாண்ட், உதயப்பூர், துன்கார்பூர், பன்ஸ்வாரா, சித்தார்கார்க் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இந்த யாத்திரை மூலம் அசோக் கெலாட் மொத்தம் 3,108 கிலோமீட்டர் தொலைவை கடக்க இருக்கிறார். மேலும் பல இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார். அதோடு தேர்தலுக்கு முன்பான இந்த யாத்திரை என்பது காங்கிரஸ் கட்சிக்கு அங்கு கூடுதல் வாக்குகளை பெற்று கொடுக்கலாம் என கருதப்ப்படுகிறது. இதனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ராஜஸ்தான் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications