பைலட் மீது தவறா? ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? போயிங் மாஜி இன்ஜினியர் முக்கிய தகவல்
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தில் பயணித்த பயணிகள், பணியாளர்கள் 242 பேரில் 241 பேர் பலியாகிவிட்டனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுபற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் விபத்துக்கு பைலட்டுகள் தான் காரணமாக இருப்பார்களா? என்ற கேள்விக்கு முன்னாள் போயிங் இன்ஜினியர் ‛ஒன் இந்தியா'வுக்கு எக்ஸ்குளூசிவ் விவரங்களை வழங்கி உள்ளார்.
இந்திய வரலாற்றில் மிகவும் மோசமான விமான விபத்து நேற்று நடந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று போயிங் 787 ட்ரீம்லைனர் ரக ஏர் இந்தியா ஏஐ171 பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் அடுத்த ஒரு நிமிடத்தில் விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவ கல்லூரி விடுதியின் மேல் விழுந்து தீப்பிடித்தது.

இதில் 241 பேர் இறந்தனர். விமானத்தில் 230 பயணிகள், 2 பைலட்டுகள், 10 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில் 241 பேர் பலியாகி உள்ளனர். விமானம் புறப்பட்ட அடுத்த சில நொடியிலேயே விமானிகள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசர உதவி கோரினர். ஆனால் அதற்குள் சிக்னல் துண்டிக்கப்பட்டு விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுபற்றி விமான விபத்து புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? இல்லாவிட்டால் விமானிகள் தவறு செய்தனரா? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் முன்னாள் போயிங் பொறியாளர் மிர்சா பைசான் ‛ஒன் இந்தியா'வுக்கு ஜூம் வீடியோ கால் வழியாக பிரத்யேக பேட்டியளித்தார். மிர்சா பைசான் அமெரிக்காவின் டெக்சாஸின் டல்லாஸை தளமாகக் கொண்ட விண்வெளி விஞ்ஞானி மற்றும் விமானப் போக்குவரத்து நிபுணராக இருக்கிறார். இவர் கடந்த 2004 முதல் 2007 வரை 787 இன் ஏவியோனிக்ஸில் போயிங் இன்ஜினியராக பணியாற்றினார். இந்நிலையில் தான் அவர் விமான விபத்து குறித்து பிரத்யேக தகவல்களை நமக்கு வழங்கி உள்ளார். இதுபற்றி மிர்சா பைசான் கூறியதாவது:
இந்த விபத்துக்கு விமானி தவறு செய்ததாக தெரியவில்லை. மாறாக விமானத்தை மேல்நோக்கி வானில் பறக்க வைக்க தேவையான உந்து விசை அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம். குறிப்பாக கூற வேண்டும் என்றால் இன்ஜின்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம். இதனால் தரையில் இருந்து விமானத்தை வானுக்கு உயர்த்த தேவையான உந்து விசை கிடைக்காமல் போய் இருக்கலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
விமானத்தின் எரிபொருள் அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டு அது இன்ஜினை செயலிழக்க கூட வைத்திருக்கலாம். மேலும் விமானம் விபத்துக்குள்ளானாலும் கூட சிறிது நேரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இது விமான கட்டுப்பாட்டு அமைப்பு சரியாக செயல்பட்டதை குறிக்கிறது. அதே சமயத்தில் விமானத்தின் பராமரிப்பு பற்றி ஆராய வேண்டிய நிலை இருக்கிறது. சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம்.
இந்த மோசமான சூழலில் விமானிகள் தங்களின் முழு திறமைகளை காட்டி விபத்தை தடுக்க முயற்சித்து அதில் அவர்களால் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். போயிங் 787 சிஸ்டமில் நான் நேரடியாக பணியாற்றி உள்ளேன். இதனால் அந்த சிஸ்டமில் ஏற்படும் தோல்விகள் பற்றி எனக்கு நன்கு தெரியும். சம்பவம் தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணைக்கான அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இந்த விபத்து என்பது போயிங்கின் கடினமான நேரத்தில் வந்துள்ளது. ஏற்கனவே போயிங் பல்வேறு நாடுகளில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் இப்படியான விபத்து நிச்சயம் போயிங்கிற்கு பெரும் பிரச்சனையாக மாறலாம்'' என்றார்.
இதன்மூலம் பைலட் மீது தவறு இருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபிசராக கிளைவ் குந்தார் ஆகியோர் இயக்கினர். கிளைவ் குந்தர் துணை விமானியாகவும், சுமீத் சபர்வால் விமானியாகவும் பணியாற்றினர்.
இதில் கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேர விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். துணை விமானியான கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமின்றி கிளைவ் குந்தர் கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவர். இவர் மும்பையில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications