10 நிமிட தாமதம்! அகமதாபாத் விமானத்தை மிஸ் செய்ததால் தப்பித்த பெண்.. சொன்ன சிலிர்க்க வைக்கும் காரணம்
அகமதாபாத்: நேற்று அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். 241 பேர் இதில் பலியானார்கள். ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா உயிர் தப்பினார்.
அதேபோல் இன்னொரு பெண் லண்டனுக்குச் செல்லவிருந்த நிலையில் அந்த விமானத்தை மிஸ் செய்த காரணத்தால் உயிர் பிழைத்துள்ளார். ஏர் இந்தியா விமானம் AI171-ல் ஏற வேண்டியிருந்த பூமி சௌஹான் என்ற பெண்.. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் உயிர் தப்பினார்.

விபத்தில் இருந்து தப்பிய பெண்
விபத்தில் இருந்து தப்பிய பூமி சௌஹான், தான் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும், கணபதி பாப்பாவே தன்னைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகவும். அங்கே கணபதி ஊர்வலம் ஒன்று நடந்தது. அதனால் விமான நிலையத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அதன் காரணமாக விமானத்தை தவறவிட்டதாகவும் கூறினார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த லண்டனைச் சேர்ந்த பூமி சௌஹான், தனியாக இங்கிலாந்துக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தார். விபத்து நடந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோன அவர், உடல் நடுங்குவதாகவும், என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், நடந்த சம்பவங்களை கேட்ட பிறகு தன்னுடைய மனம் வெறுமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர்
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்குச் சென்ற போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். இந்த விமானம் மருத்துவக் கல்லூரி அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், தரையில் இருந்த பலரும் உயிரிழந்தனர். இது இந்தியாவின் மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விபத்தில் உயிர் பிழைத்த பயணி
விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற 40 வயதுடைய பிரிட்டிஷ் பயணி உயிர் பிழைத்தார். விமானம் விழுந்தபோது அவர் 11A இருக்கையில் அமர்ந்திருந்தார். அவசர மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்ட விஷ்வாஸ் குமார் ரமேஷ், தற்போது ஆஸ்ரவாவில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மார்பு, கண்கள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. "என்னைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன... யாரோ ஒருவர் என்னை எழுப்பி நடக்க வைத்தார்.. பின்னர் ஆம்புலன்ஸுக்குள் அழைத்து சென்றார்," என்று அவர் விபத்து குறித்து கூறினார்.
இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பூமி சௌஹான் பத்து நிமிடம் தாமதமாக வந்ததால் உயிர் தப்பியுள்ளார். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் கருவியான 'பிளாக் பாக்ஸ்' எனப்படும் கருப்புப் பெட்டி மீது தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. கருப்பு பெட்டி மீட்கப்பட்டுவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications