ரைட்டு.. பாஜகவும்-அதிமுகவும் ஒன்னு.. வெங்கையா நாயுடு சொல்லிட்டாரு
டெல்லி: பாஜகவும், அதிமுகவும் கொள்கை அளவில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் என கூறியுள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, அதிமுக தனது ஆதரவை பாஜகவுக்கு தொடர்ந்து அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவு செய்தி வெளியாகும் சில மணி நேரங்கள் முன்பிருந்தே சென்னையில் முகாமிட்டவர் வெங்கையா நாயுடு. ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படும்வரை ராஜாஜி ஹாலில் நாள் முழுக்க காத்திருந்தார் அவர்.
இந்த நிலையில், பாஜகவின் கைப்பாவையாக தமிழக அரசை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சசிகலாவின் தலை மீது மோடி கைவைத்து ஆறுதல் கூறியது, அவரை தங்களது திட்டத்திற்கான பகடை காயாக பயன்படுத்துவதற்காகத்தான் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
பன்னீருக்கும் ஆறுதல்
இதுகுறித்து ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், "சசிகலா தலையில் மோடி கை வைத்து ஆறுதல் கூறியதை இஷ்டத்திற்கு விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில், பன்னீர்செல்வத்திடம், உங்களுக்கு என்ன பிரச்சினை, எந்த நேரத்தில் எழுந்தாலும் என்னை அழையுங்கள் என மோடி கூறிச் சென்றதையும் கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
எதிர்க்காத அதிமுக
மேலும், ஜெயலலிதாவுக்கு, பாஜக மீது என்றுமே வெறுப்பு இருந்தது கிடையாது என கூறும் வெங்கையா, ஜிஎஸ்டி மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட, அது நிறைவேறுவதை தடுக்கவில்லை. வெளிநடப்பு செய்தது அவ்வளவுதான். பல சந்தர்ப்பங்களில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவும் தெரிவித்துள்ளது என்றார்.
கொள்கை ஒன்றே
விஷயங்களின் அடிப்படையில் பாஜகவுக்கு அதிமுக சப்போர்ட் செய்து வந்ததாகவும், கொள்கை ரீதியாக பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இரண்டுமே ஒன்றுபட்டவைதான் எனவும், அவர் கூறியுள்ளார். இப்போதைக்கு தமிழகத்தில் தேர்தல் நடைபெறப்போவதில்லை என்பதால், கூட்டணி குறித்த பேச்சுக்கு அவசியம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆதரவு தொடரும்
ஜெயலலிதா காலத்தை போலவே பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு இனி வரும் காலங்களிலும் தொடரும் என்று தான் நம்புவதாகவும் நாயுடு தனது பேட்டியில் முத்தாய்ப்பாய் தெரிவித்துள்ளார்.