நம்ப வைத்து கழுத்தறுத்துட்டாங்களே- அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் அதிமுக சீனியர் எம்பிக்கள்!
மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காத விரக்தியில் இருக்கிறார்களாம் அதிமுக சீனியர் எம்.பிக்கள்.
டெல்லி: மத்திய அமைச்சரவையில் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என ரொம்பவே காத்து கொண்டிருந்த அதிமுக சீனியர் எம்.பிக்கள் இப்போது டெல்லி மீது கடும் கோபத்தில் வலம் வருகிறார்களாம்.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் உறுதி என தெரிந்த உடனேயே இரட்டை இலாகா வைத்திருந்த சீனியர் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது எம்பிக்கள் குழு. அப்போது, எங்களிடம் 50 எம்.பிக்கள் இருக்கின்றனர்; மாநிலத்திலும் நீங்க சொல்வதைத்தானே கேட்கிறோம். குறைந்தது 4 அமைச்சர் பதவி கொடுக்கலாமே என அடிபோட்டு பேச ஆரம்பித்தது இந்த குழு.
கைவிரித்த டெல்லி சீனியர்
ஆனால் இரட்டை இலாகா சீனியர் அமைச்சரோ, அதெல்லாம் வேண்டாம் என நினைக்கிறோம். ஜெயலலிதா இருந்தபோது என்ன நிலை இருந்ததோ அதுவே தொடரட்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என கைவிரித்திருக்கிறார். உடனே அதிமுக சீனியர் எம்பி, நாங்க பிரதமரையே பார்த்து பேசுகிறோம் என வாய்ஸை கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கிறார்.
பிரதமரிடம் புலம்பல்
இதைபற்றியெல்லாம் கவலைப்படாத அந்த சீனியர் நமட்டாக சிரித்து கொண்டே, அங்கே போனாலும் இந்த பதில்தான் கிடைக்கும் எனக் கூறி வழியனுப்பி வைத்திருக்கிறார். இதையடுத்து பிரதமரிடம் அதிமுக குழு நேரில் சந்தித்து பேசியுள்ளது.
விரக்தியில் அதிமுக எம்பிக்கள்
சீனியர் அமைச்சர் சொன்னதையே ரிப்பீட்டாக கூறி, ஏற்கனவே இருந்த நிலையே தொடரட்டுமே என கூறிவிட்டார். இதனால் கையை பிசைந்து கொண்டு வெளியே வந்ததாம் அதிமுக எம்.பி குழு.
எதிர்பார்ப்பு நியாயம் இல்லையே...
இத்தனை விசுவாசம் காட்டியும் கடைசியில கையை விரிச்சுட்டாங்களே...என நொந்து புலம்பியிருக்கிறார்கள் அதிமுக எம்பிக்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக தலைவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த சீனியருக்கே அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதைவிடுங்க.. பீகாரில் ஆட்சியை பகிர்ந்து கொண்ட ஐக்கிய ஜனதா தளத்துக்கு இணை அமைச்சர் பதவி கூட இல்லை. ஜஸ்ட் எங்களுக்கு ஆப்சனாக மட்டுமே இருக்கும் அதிமுகவுக்கு எப்படி அமைச்சர் பதவி தருவாங்க? இவங்க எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகம்தான் என கூறினார்.