லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே நாளில் தேர்தல்... அதிமுக, தேமுதிக ஆதரவு
டெல்லி: லோக்சபாவுக்கும் , மாநில சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் காங்.,இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்துள்ளன. இதில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிக்கவில்லை.
சட்டம், மற்றும் பணியாளர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரையில் லோக்சபாவுக்கும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து நிலைக்குழுவின் பரிந்துரை தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, அதிமுக, தேமுதிக இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் சில ஆலோசனைகளுடன் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதன் பரிந்துரையை நிராகரித்துள்ளன. பாஜகவின் நிலைப்பாடு தெரிவிக்கப்படவில்லை.
அதிமுக தெரிவித்துள்ள யோசனையில், லோக்சபாவுக்கும் , மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில், இரண்டுக்கும் ஒரே மாதிரியான பதவிக் காலம், ஒரே நாளில் தேர்தல், ஒரே தேதியில் வாக்கு எண்ணிக்கை ஆகியவை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தேமுதிக, " இடைத்தேர்தல்கள் நடைபெறும் சூழ்நிலையில், அந்தத் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படும் அரசு, முந்தைய அரசின் பதவிக்காலத்தை தவிர்த்து எஞ்சிய பதவிக்காலம் மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும். முழு பதவிக் காலமான 5 ஆண்டுகள் பதவி வகிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்கிறது.