எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டிலிருந்து தாவி ஓடிய எலி!
டெல்லி: டெல்லியில் உள்ள புகழ் பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டுக்குள்ளிருந்து உயிரு்டன் ஒரு எலி தாவிக் குதித்து ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதி நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட நாட்டின் முதன்மையான மருத்துவமனை டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையாகும்.
ஆனால் இங்கு சுகாதார சீர்கேடு மலிந்து வருவதாக சமீபகாலமாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதை நிரூபிப்பது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு நோயாளிகளுக்கு பிரெட், பிஸ்கட், பால் போன்றவை வழங்கப்படுகிறது. இதை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இந்த நிலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டை அவர் பிரித்தபோது அதற்குள்ளிருந்து ஒரு எலி தாவிக் குதித்து ஓடியுள்ளது. இதைப் பார்த்து அந்த நோயாளியும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அது பிரவுன் ஹை பைபர் பிரெட் ஆகும். இதை பான் நியூட்ரியன்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. எப்படி சீல் வைக்கப்பட்ட பாக்கெட்டிலிருந்து உயிருடன் எலி ஓடியது என்று தெரியவில்லை.
இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தகவல் இல்லை என்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மறுத்துள்ளார். ஆனால் நடந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு டாக்டரே கூறியுள்ளார். தற்போது அந்த பிரெட் கம்பெனிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை 3 வருட தடை விதித்துள்ளதாம்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.