கொடுமை.. அகமதாபாத்தில் விமானம் போய் விழுந்தது மருத்துவ கல்லூரி விடுதி மீது! பல மாணவர்கள் பலி?
அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் மேகானி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பைலட், 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என்று மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகில் இருந்த மேகானி நகரின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விமானம் நன்றாக டேக் ஆஃப் ஆகி 625 அடி உயரத்திற்கு மேல் சென்ற நிலையில், திடீரென கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி விழுந்து நொறுங்கியது. விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே சிக்னலை இழந்திருக்கிறது. இதன் காரணமாக மே டே என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில நொடிகளில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி வெடித்துள்ளது. இதனால் வானளவு கரும்புகை எழுந்தது. இந்த விமானத்தில் பயணித்த 133 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் விமானம் விழுந்தது எந்த குடியிருப்பு பகுதி என்பது தெரிய வந்துள்ளது. அதாவது மேகானி நகரில் உள்ள பிஜெ மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்துள்ளது.

இதனால் மருத்துவக் கல்லூரி விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. விமானத்தில் பயணித்த பயணிகள், விமான ஊழியர்கள் மட்டுமல்லாமல், கட்டடத்தில் இருந்தவர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
விமானம் விபத்தில் சிக்கிய உடன் அங்கு அதிகளவிலான மாணவர்கள் குவிந்தனர். இதற்கு மருத்துவ கல்லூரி விடுதியில் விமானம் விழுந்ததே காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் மாணவர்கள் மற்றும் 90 பேர் கொண்ட மீட்புப் படையும், தீயணைப்பு குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விமானம் விழுந்த போது விபத்தில் சிக்கிய மாணவர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 20 மாணவர்கள் விபத்தில் சிக்கி இருப்பதால், அவர்களின் பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications