ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறன் உட்பட அனைவரும் விடுவிப்பு- சிபிஐ கோர்ட் அதிரடி!!
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கப் பிரிவும் வழக்கு
மேலும் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முன்ஜாமீன் மனுக்கள்
இந்த வழக்குகளில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
5 முறை ஒத்திவைப்பு
இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த போதும் தீர்ப்பு ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார்.
அதிரடி தீர்ப்பு
இவ்வழக்கில் முதலில் இன்று காலை தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி ஓபிஷைனி ஒத்திவைத்தார்.
அனைவரும் விடுவிப்பு
இதன்படி இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளித்த நீதிபதி ஓபி ஷைனி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்கிறேன் என தீர்ப்பளித்தார்.