மது போதையில் பணிக்கு வரும் விமானிகள்.. மும்பை விமான நிலையத்தில் அதிகமாம் பதற வைக்கும் 'ரிப்போர்ட்' !
டெல்லி: இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மும்பை விமான நிலையத்தில் 34 விமானிகள் பிடிபட்டுள்ளனர்.
ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவதும், கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளாவதும் என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மது அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 34 விமானிகள் பிடிபட்டுள்ளனர். அதன்பின் டெல்லியில் 31 பேரும், கொல்கத்தாவில் 18 பேரும், சென்னையில் 10 பேரும், பெங்களூரில் 9 பேரும் பிடிபட்டுள்ளனர்.
பட்டியலிடப்பட்டுள்ள 16 விமான நிலையங்களில் மொத்தம் 122 பேர் சிக்கியுள்ளனர். மேலும், பாங்காக், பிராகா, இஸ்தான்புல் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2016 ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 23 விமானிகள் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர். இது 2015ல் 43 பேரும், 2014ல் 30 பேரும், 2013 ஆம் ஆண்டில் 26 விமானிகளும் பிடிபட்டுள்ளனர்.