தேர்தல் தோல்வி: சோனியாவிடம் ஏ.கே. அந்தோணி குழு அறிக்கை தாக்கல்!
லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத வகையில் வெறும் 44 தொகுதிகளைத்தான் காங்கிரஸ் கைப்பற்றியது.
தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் .இதனிடையே காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வி குறித்து ஆராய ஏ.கே. அந்தோணி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் ஏ.கே.அந்தோணி, முகுல் வாஸ்னிக், ஆர்.சி. குனிதா மற்றும் அவினாஸ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் ஏ.கே. அந்தோணி தலைமையிலான குழு நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து தமது ஆய்வு அறிக்கையை கொடுத்தது. விரைவில் 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏ.கே. அந்தோணி குழுவின் அறிக்கை அக்கட்சிக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.