நவ. 11 வரை தேசிய நெடுஞ்சாலைகளில் "டோல்" வசூலிப்பது நிறுத்தி வைப்பு - கத்காரி
நவம்பர் 11ம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களிடம் டோல் வசூலிப்பதை நிறுத்தி வைக்க மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
டெல்லி: ரூ. 500 மற்றும் 1000 நோட்டு ஒழிப்பால் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்தாலும், புதிய கரன்சிகள் இன்னும் வெளியிடப்படாததாலும், சில்லறைப் பிரச்சினை எழுந்துள்ளதாலும் நவம்பர் 11ம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற திட்டம் அமலுக்கு வந்து விட்டது. மேலும் வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுக்களை இருப்பில் வைக்க வசதியாக வங்கிகளையும் மூடி விட்டது அரசு.
இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளிலும் பலர் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய சில்லறை தர அங்குள்ள ஊழியர்களிடம் தேவையான பணம் இல்லை.
இதனால், பல சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. சில இடங்களில் சிறப்பு அனுமதியுடன் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதேசமயம் பெரும் கூட்ட நெரிசலும் காணப்படுகிறது. இதையடுத்து தற்போது மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் நவம்பர் 11ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் கத்காரி அறிவித்துள்ளார்.