ஆக்ஸிஜனை சுவாசித்து வெளியேற்றும் ஒரே விலங்கு பசு.. இது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.. அலகாபாத் ஹைகோர்ட்
அலகாபாத்: ஆக்ஸிஜனை சுவாசித்து வெளியேற்றும் ஒரே விலங்கு மாடுகள் என விஞ்ஞானிகள் நம்புவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது போல் ஏற்கெனவே உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் 2019 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஜாவேத் என்பவர் பசுவை திருடி அதை கொன்ற வழக்கில் ஜாமீன் கொடுக்க மறுத்து அலகாபாத் நீதிமன்றம் கீழ்கண்ட கருத்துகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியில் எழுதப்பட்ட 12 பக்க உத்தரவில் நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறுகையில் பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யானது பாரம்பரியமாக யாகங்களில் பயன்படுத்தப்படுகிறது. சூரிய கதிர்களுக்கு சிறப்பு சக்தியை கொடுத்து மழை பெய்ய காரணமாகிறது.

பஞ்சகாவியா என்பது பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து தயாரிப்பது. இது தீராத நோய்களையும் தீர்க்கும். பசுவானது ஆக்ஸிஜனை சுவாசித்து ஆக்ஸிஜனையே வெளியேற்றுகிறது. கார்பன் டை ஆக்ஸைடை அல்ல. ஒரு பசு தனது வாழ்நாளில் 800 பேருக்கு பால் கொடுக்கிறது. ஆனால் அதன் மாமிசமோ வெறும் 80 பேருக்கு மட்டுமே உணவாக கொடுக்க முடியும்.
ஒரு மாட்டையோ பசுவையோ கொல்வது மனிதரை கொல்வதற்கு சமம். ஒரு உயிரை வாழ வைக்கும் உரிமை கொன்று மாமிசம் எடுப்பதை காட்டிலும் மேலானதாகும். பசு மாட்டிறைச்சியை சாப்பிடுவதை ஒரு போதும் அடிப்படை உரிமையாக கருத முடியாது. மற்றவரின் சுவைக்காக ஒரு விலங்கு வாழ்வதற்கான உரிமையை பறிக்க முடியாது என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதே வழக்கில் பசுவை தேசிய விலங்காக அறிவித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என நீதிபதி சேகர் குமார் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார். பாபர், ஹுமாயுன் , அக்பர் ஆகியோர் மத விழாக்களில் பசுக்களை கொல்வதை தடை செய்துள்ளனர் என்றும் மைசூர் ஆட்சியாளராக இருந்த ஹைதர் அலி, பசு வதையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்ததாகவும் கூறிய நீதிபதி , ஒரு நாட்டின் கலாசாரம், நம்பிக்கை பாதிக்கப்படுவதால் நாடு பலவீனமடையும் என்பதால் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். விலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு எதிராகவும் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications