குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு.. உண்மையாக இருக்கலாம்: சுஷில் குமார் ஷிண்டே
டெல்லி: ஹிந்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உத்தரவிட்டதாக வெளியான செய்திகள் உண்மையாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ், ஹைதரபாத் மெக்கா மசூதி மற்றும் அஜிமீர் தர்கா குண்டு வெடிப்பு ஆகியவற்றை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவ உத்தரவிட்டார் என்று ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்த் பேட்டி அளித்திருந்தார்.
இதை ஹிந்து அமைப்புகள் மறுத்தாலும் அசீமானந்த் பேட்டியை வெளியிட்ட தி காரவன் ஊடகம், ஆதாரங்களுடன் அசீமானந்த் பேட்டியின் ஒலிப்பதிவையும் வெளியிட்டது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். மறுப்பு
ஆனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இதனை மறுத்துள்ளன. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், அசீமானந்தாவின் வழக்கறிஞரே இதை மறுத்துள்ளார் என்றார். ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மகாதேவ், இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றார்.
உண்மையாக இருக்கலாம்- ஷிண்டே
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, அவர் என்ன சொன்னார் என்று பாருங்கள், அவர் வெளிப்படுத்தும் நோக்கத்தில் கூறியிருந்தால் அது உண்மையாக இருக்கலாம். இது மிகவும் முக்கியமான தகவல். இது நாட்டில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக விவாதிக்கப்படவேண்டும். உண்மை கண்டிப்பாக வெளிவர வேண்டும் என்றார். இதேபோல் கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்றார்.
இதேபோல் ஐக்கிய ஜனதா தளத்தில் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில், இது ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேலையே இதுதான்.. இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications