சட்ட பிரிவு 377 என்றால் என்ன? ஏன் இது சர்ச்சை ஆகிறது? உண்மையான காரணம் என்ன?
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Recommended Video
டெல்லி: மிகவும் பழமையான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்கு உரிய சட்ட பிரிவு ஆகும். இது நெடிய வரலாறு கொண்டது.
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையருக்கும் சட்ட பிரிவு ஆகும்.
சட்டம் என்ன
அரசியல் சட்ட பிரிவு 377 என்பது, இந்தியாவில் பாலியல் உறவுகளை வரையறுக்கும் சில சட்டங்களில் ஒரு சட்டம் ஆகும். பாலியல் உறவுகளை வரையறுக்க இந்தியாவில் சில தண்டனை சட்டங்கள் உள்ளது. அதில் அரசியல் சட்ட பிரிவு 377ம் ஒன்றாகும். இதன்படி ஓரின சேர்க்கை, தன் பாலின சேர்க்கை எனப்படும் ''ஆண்-ஆண்'' ''பெண்-பெண்'' உறவு கொள்ளும் ''ஹோமோசெக்சுவல் (homosexual)'' உறவு முறை தவறானது என்று கூறப்படுகிறது.
கொண்டுவந்தது யார்
இந்த சட்டம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷினரால் கொண்டு வரப்பட்டது. 1860 ஆம் ஆண்டு, மெக்காலேவினால் கொண்டுவரப்பட்டது. அதே சமயம், இந்த சட்டம் வங்காளதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா போன்ற பிரிட்டனின் பிற காலனி ஆதிக்க நாடுகளிலும் கொண்டு வரப்பட்டது. அப்போது இருந்த இங்கிலாந்து அரச குடும்பம் இதை தவறான உறவாக கருதியதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
சட்டத்தில் என்ன தவறு
இதில் சட்டத்தில் என்ன தவறு இருக்கிறது என்றால், இந்த சட்டம் முழுக்க முழுக்க அப்போதைய விக்டோரியன் அரச குடும்பத்தின் உணர்வுகளை மையப்படுத்தி மட்டுமே கொண்டு வரப்பட்டது. அதே போல், இதில் சாதாரண மக்கள் (ஓரின சேர்க்கை கொள்ளாதவர்கள்) கொள்ளும் சில பாலியல் உறவு முறைகளும் தவறு என்று கூறப்படுகிறது. ஆனால், காலம்காலமாக, இந்த சட்டம் திருநங்கைகளுக்கு எதிராகவும், ''அவனா நீ'' என்று வஞ்சிக்கப்படும் பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராகவும் முறையின்றி பயன்படுத்தப்படுகிறது.
பெரிய முரண்பாடு
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த சட்டத்தை கொண்டு வந்த இங்கிலாந்து நாடே இதை திரும்ப பெற்றுக்கொண்டது. 1967ல் இந்த சட்டம் அங்கு திரும்ப பெறப்பட்டுவிட்டது. இது மக்களின் பாலியல் தேர்வுக்கு எதிரானது என்று முற்போக்கான முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் மற்ற சில நாடுகளில் இந்த சட்டம் நீக்கப்பட்டது. ஆனால், கஜீராஹோ சிற்பங்களில் பல்வேறு பாலியல் உறவு முறைகளை (ஓரின சேர்க்க உட்பட) வெளிப்படையாக காட்சிப்படுத்தி இருக்கும் இந்தியா, அந்த சட்டம் குறித்து வாய் திறக்காமல் இருந்தது.
வழக்கு தொடுக்கப்பட்டது
இந்த நிலையில்தான் நாஸ் பவுன்டேஷன் என்ற இயக்கம் இந்த சட்டம் தவறானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் சென்றது. அப்போது இதை விசாரித்த நீதிபதிகள், இந்த சட்டம் மக்களின் பாலியல் தேர்வுக்கு எதிரானது. இந்த சட்டம் மற்ற சில சட்டங்களில் உள்ள வரையறைகளை மீறுகிறது. இதனால், இதில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
என்ன தீர்ப்பு
அதன்படி இதில் 2009, டெல்லி உயர் நீதிமன்றம் பெரிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி இந்த சட்டத்தை நீக்காமல், 18 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் இருவர் அவர்களின் பாலியல் விருப்பத்தின் உறவு கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தது. இதை பல ஓரின சேர்க்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கொண்டாடினார்கள்.
எதிர்ப்பு வந்தது
ஆனால் அப்போதும் போல, மத அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இதற்கு எதிராக குரல் கொடுத்து மேல்முறையீடு செய்தது. அதன்படி அந்த வருடமே உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்று கூறப்பட்டது.
தீர்ப்பு எப்படி
இந்த சட்டத்தை நீக்குவதும் முழுக்க முழுக்க தவறாக முடிய வாய்ப்புள்ளது. ஓரின சேர்க்கையில் விருப்பம் இல்லாத நபர்கள் இதனால் சில வகையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகிறது. டெல்லி உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த மாற்றமே சிறந்தது என்று கூறப்படுகிறது.
மறுசீராய்வு
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக 9 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு சீராய்வு மனுக்கள் மீது இந்த வருட தொடக்கத்தில் விசாரணை நடந்தது. பல்வேறு அமைப்புகள், எழுத்தாளர்கள் இதில் மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 22க்கும் அதிகமான நபர்கள் (ஐஐடியில் பட்டம் பெற்ற சிலர் உட்பட) இந்தசட்ட பிரிவிற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.
இன்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எப் நாரிமன், ஏ எம் கான்வில்கர், டி ஒய் சந்திரசாத், இந்து மல்கோத்ரா அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.