ஜெயப்பிரதா, அமர்சிங் வழக்கு தள்ளுபடி.. இதில் சசிகலா புஷ்பாவுக்கு ஏதாவது சாதகம் இருக்கா?
டெல்லி: பதவிக்காலம் முடியும் முன் தங்களது எம்.பி பதவியை பறிக்கக் கூடாது என்று நடிகை ஜெயபிரதாவும், அமர்சிங்கும் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. பதவிக்காலம் முடிந்து விட்டதால் வழக்கை விசாரிக்க அவசியமில்லை என்று கூறி மனு நிராகரிக்கப்பட்டது.
ஒரு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி., கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறலாமா? அவ்வாறு மீறினால் அவரது பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சசிகலா புஷ்பா விவகாரத்தில் அவரது பதவி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமர்சிங் - ஜெயப்பிரதா
சமாஜ்வாடி கட்சியில் எம்.பி.யாக பதவி வகித்து வந்த அமர்சிங்கும், நடிகை ஜெயபிரதாவும் 2010ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் சுதந்திர மனிதனாக இருப்பதை உணர்கிறேன். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யும் எண்ணமில்லை. முலாயம் சிங் கேட்டுக்கொண்டால் கூட எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றார் அமர்சிங்.

பதவியில் இருந்து நீக்கம்
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை காரணம் காட்டி, ஜெயப்பிரதாவை லோக்சபா உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவும், அமர்சிங்கை ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. கட்சி கொறடாவின் உத்தரவை ஏற்க மறுத்ததால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் நிலை உருவானது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
2010ம் ஆண்டு சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் அமர்சிங் நீக்கப்பட்டார். மக்களவை உறுப்பினர் ஜெயப்பிரதாவும் நீக்கப்பட்டார். இதையடுத்து, தங்களது பதவிக்காலம் முடியும் வரை தங்களை பதவியில் இருந்து நீக்கக் கூடாது என்று கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில், நாங்கள் கட்சியில் இருந்து விலகவும் இல்லை. புதிய கட்சியும் தொடங்கவில்லை. எனவே 1996ம் ஆண்டு கட்சித்தாவல் தடைச்சட்டப்படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் கீழ்(ஜி.விஸ்வநாதன் வழக்கு) எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
முதலில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த மனு பின்பு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
தற்போது இருவரது பதவிக்காலமும் முடிந்துவிட்டதால் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், அமர்சிங், ஜெயபிரதா ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கொறடா வார்த்தையை மீறலாமா?
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறலாமா? அவ்வாறு கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறினால் பதவியை இழக்க நேரிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஸ்வநாதன் வழக்கின் அடிப்படையில் சசிகலா புஷ்பாவின் எம்.பி. பதவி பறி போக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா, கடந்த 2014 ஏப்ரல் மாதம், அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. தற்போது அ.தி.மு.க. தலைமை, சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, இனி ராஜ்யசபா எம்.பி.யாக தொடர்ந்து பதவி வகிக்க முடியுமா என்ற விவாதங்கள் கிளம்பி உள்ளன.

பதவிக்கு ஆபத்து ?
தற்போது, அ.தி.மு.க. தலைமையே சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதால், கொறடாவின் உத்தரவு அவருக்கு பொருந்தாது என்று ஒரு தரப்பினரும், தனது கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்து சசிகலா புஷ்பா வாக்களித்தாலும் அவரது பதவிக்கு ஆபத்து வராது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சலுகைகள் கிடைக்கும்
ராஜ்யசபா எம்.பி.யான சசிகலா புஷ்பா, தானாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் தொடர்ந்து அவர் 2020-ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார். வழக்கம்போல் சம்பளம் மற்றும் பயணப்படி என்று மாதம் ஒரு லட்சம் ரூபாயும், ஆண்டுக்கு 30 தடவை இலவச விமான பயணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அவருக்கு கிடைக்கும். எம்.பி.களின் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுக்கு வழங்கப்படும் 5 கோடி ரூபாயும் அவருக்கு வரும் என்கிறார்கள்.

கொறடா உத்தரவு
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் முக்கியமான விவாதங்களில், ஓட்டெடுப்பு நடக்கும்போது அதனை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கட்சி தலைமை எடுக்கும் நிலைப்பாடு பற்றி அந்தந்த கட்சியின் கொறடா, எம்.பி.களுக்கு உத்தரவு போடுவார். கொறடா உத்தரவை மீறி ஓட்டளித்தால் சம்மந்தப்பட்ட எம்.பி.யின் பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications