குக்கர் ஆர்டர் செய்துவிட்டு, ஐபோன்களை பார்சல் செய்து ஆட்டய போட்ட அமேசான் ஊழியர்
மும்பை: அமேசான் நிறுவன ஆன்லைனில், தனது பெயரில் சமையல் குக்கர் ஆர்டர் செய்துவிட்டு, பார்சல் செய்யும் நேரத்தில், விலையுயர்ந்த பொருட்களை மாற்றி வைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய அந்த நிறுவனத்தின் பலே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் வணிகத்தில் முன்னணியிலுள்ளன. சில நேரங்களில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் பொருளை தவிர்த்து வேறு பொருள், பார்சலில் செல்வதும் உண்டு.

ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் சென்றது இதற்கு ஒரு உதாரணம். இதுபோன்ற கோல்மால்களுக்கு ஆன்லைன் நிறுவன ஊழியர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம் இப்போது அம்பலமாகியுள்ளது.
மும்பை பிவான்டியிலுள்ள, அமேசான் நிறுவனத்தின் குடோனில் வேலை பார்ப்பவர் 21 வயது, பிரமோத் பம்லே. சமீபத்தில் திருட்டு பொருள் விற்பனை வழக்கில் இவரை மும்பை, விதல்வாடி போலீசார் கைது செய்தனர். குறைந்தவிலைக்கு அவர் பொருள் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டபோது, ரூ.8 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள ஐபேட், ஐபோன், விலையுயர்ந்த வாட்சுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரமோத், அமேசான் நிறுவன பார்சல் டிபார்ட்மென்டில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பல்வேறு 'யூசர்நேம்'களில் அமேசான் வெப்சைட்டில் சமையல் குக்கர்களை ஆர்டர் செய்யும், பிரமோத், பார்சல் பகுதிக்கு வரும்போது, குக்கர்களுக்கு பதிலாக, விலையுயர்ந்த பொருட்களை வைத்து அனுப்புவாராம். பிறகு அந்த பொருட்களை டெலிவரி பெற்றுக்கொண்டு, வெளியாட்களிடம் குறைந்த விலையில் விற்பாராம்.
இவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 420 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications