'மே டே, மே டே' என அலறிய முகேஷ் அம்பானி விமானிகள்: மும்பையில் பரபரப்பு
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் இருந்து அபாய தகவல் வந்ததால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் 2 மணிநேரம் பதட்டம் நீடித்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 2007ம் ஆண்டு தனது மனைவி நீத்தாவின் 44வது பிறந்தநாள் அன்று அவருக்கு ரூ. 242 கோடி மதிப்புள்ள ஏர்பஸ் 319 விமானத்தை பரிசாக அளித்தார். அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தனியார் விமானங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அம்பானி விமானம் டெல்லி, லாகூர் வழியாக மஸ்கட் செல்வதாகவும் அதில் தீப்பிடித்துவிட்டதாகவும் மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனர். மீண்டும் 6 நிமிடங்கள் கழித்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானிகள் அம்பானி விமானம் தீப்பிடித்து கடலில் விழப் போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் டெல்லி, கராச்சி, மஸ்கட் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விமானம் ஏதாவது தீப்பிடித்து கடலில் விழப் போகிறதா என்று கேட்க அவர்கள் அப்படி எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து மும்பை அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்த சிக்னலை வைத்து பார்த்தபோது தான் அது மும்பை விமான நிலையத்தில் இருந்து வருவது தெரிந்தது.
உடனே மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அங்கு அம்பானியின் விமானம் நிற்கிறதா என்று கேட்டனர். அவர்களும் தனியார் விமானங்கள் நிற்கும் இடத்திற்கு சென்று பார்த்தால் அம்பானி விமானம் அங்கு நின்று கொண்டிருந்தது. விமானி அறையில் 2 விமானிகள் இருந்தனர்.
விமான நிலையத்தில் நின்று கொண்டே ஏன் அபாய எச்சரிக்கை அளித்தீர்கள் என்று கேட்டதற்கு விமானிகள் கூறுகையில், அவசர நேரத்தில் பயணிகளை சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றுவார்களா என்பதை கண்டறிய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை பரிசோதனை நடத்த இருந்தது. அதற்கு முன்னோட்டம் பார்த்தோம் என்றனர்.
இந்த சம்பவம் பற்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications