அம்பேத்கர் பற்றி சாமி சத்தியமாக நான் அப்படி பேசலை ரேஞ்சுக்கு அமித்ஷா விளக்கம்- காங்கிரஸுக்கு டோஸ்!
டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதும் காங்கிரஸ் கட்சிதான்; காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கருக்கு எதிரானது; அம்பேத்கர் குறித்து நான் பேசியதில் உண்மையை திரித்து பேசுகிற காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து கொந்தளிப்பு உருவானதால் டெல்லி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தந்தார் அமித்ஷா.
டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி நேற்று முதல் உண்மையை மறைத்து திரித்து வருவதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்பேத்கருக்கு எதிராக நான் எந்த கருத்தையும் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

சாவர்க்கருக்கு அவமரியாதை:
காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கருக்கு எதிரான கட்சி. காங்கிரச்தான் அரசியல் சாசனத்துக்கும் இடஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. ஏற்கனவே வீர சாவர்க்கரை அவமதித்ததும் காங்கிரஸ்தான். எமர்ஜென்சியை அமல்படுத்தியதும் அரசியல் சாசன விழுமியங்களை ஒழித்துக் கட்டியதும் காங்கிரஸ்தான்.
அம்பேத்கர் பாரத ரத்னா:
நாடாளுமன்ற விவாதங்களைப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி எப்படி அம்பேத்கருக்கு எதிரானதாக இருக்கிறது என்பது நிரூபணமாகும். அம்பேத்கருக்கு அவரது மரணத்துக்குப் பின்னர் கூட பாரத ரத்னா தர மறுத்து வேடிக்கை காட்டிய கட்சிதான் காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களுக்கு தானே பல முறை பாரத ரத்னா விருதைக் கொடுத்துக் கொண்டார்கள். 1955-ம் ஆண்டு நேரு தமக்கு தாமே பாரத ரத்னா விருது பெற்றுக் கொன்டார். 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி தமக்கு தாமே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார். ஆனால் 1990-ம் ஆண்டுதான் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத காலத்தில்.. பாஜக ஆதரவுடனான மத்திய அரசு ஆட்சியில் இருந்த போதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் மீதான நேருவின் வெறுப்பை நாடு நன்கு அறியும்.
திரித்துவிட்ட காங்கிரஸ்:
ராஜ்யசபாவில் நான் பேசியது திரிக்கப்பட்டுள்ளது. இதேபோல முன்னர் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை திரித்தது காங்கிரஸ். தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவிய போது என்னுடைய பேச்சை AI மூலம் எடிட் செய்தனர். இன்றும் அதே வேலையை செய்கிறது காங்கிரஸ். ஆகையால் ராஜ்யசபாவில் நான் என்ன பேசினேன் என்பதை அனைத்து ஊடகங்களும் மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.
அம்பேத்கர் கொள்கை வழி:
பாஜக ஒருபோதும் அம்பேத்கரை அவமதித்து கிடையாது. ஜனசங்கமாக இருக்கட்டும், பாஜகவாக இருக்கட்டும்.. அனைவருமே அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்ப்பற்றவே செய்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் பாஜக அமர்ந்தால் அம்பேத்கரின் கொள்கைகளை பரப்பும் நடவடிக்கைகளைதான் மேற்கொண்டும் வருகிறது.
இடஒதுக்கீடு:
இடஒதுக்கீட்டை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதும் பாஜகதான். காங்கிரஸ் கட்சியின் திரிபுவாத முயற்சிகளுக்கு மல்லிகார்ஜூன கார்கே உடந்தையாக இருக்கக் கூடாது. ராகுல் காந்தியின் நெருக்கடிக்கு நீங்களும் (மல்லிகார்ஜூன கார்கே) அடிபணிந்திருப்பதுதான் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications