பிரதமரைச் சந்திக்கிறார் ஜித்தன் ராம் மஞ்சி... பாஜகவில் சேரத் திட்டம்?
டெல்லி: பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி டெல்லி வந்துள்ளார். இன்று மாலை அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். அவர் பாஜகவில் சேரலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு மஞ்சி பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளாராம். அப்போது பீகார் மாநில அரசியல் சிக்கல் குறித்து அவர் பிரதமரிடம் விவாதிப்பார் என்று தெரிகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மஞ்சி டெல்லி வந்துள்ளார். இருப்பினும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பீகார் விவகாரம் குறித்து பிரதமருடன் விவாதிப்பார் என்று தெரிகிறது.

பாஜக தலைவர் அமீத் ஷாவையும் அவர் சந்திக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அவர் பாஜகவில் சேருவது உறுதி என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 வயதான மஞ்சி நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். கட்சித் தலைவர்கள் ஷரத் யாதவ், நிதீஷ் குமார் ஆகியோரை தொடர்ந்து புறக்கணித்து செயல்பட்டு வந்த மஞ்சி, நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராவதற்கு வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவிட்டதை ஏற்காமல் மறுத்து விட்டார். அத்தோடு நில்லாமல் சட்டசபையைக் கலைக்கவும் ஆளுநருக்குப் பரிந்துரைத்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சட்டசபையைக் கலைக்கும் முடிவுக்கு அமைச்சர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று மாலை கூடிய ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ் குமாரை புதிய சட்டசபை கட்சித் தலைவராக (முதல்வராக) எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தனர்.
மஞ்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது அமைச்சரவையில் இருந்த 27 பேரில் 20 பேர் ராஜினாமா செய்து விட்டனர். 7 அமைச்சர்கள் மட்டுமே மஞ்சியுடன் உள்ளனர்.
மாநில ஆளுநர் திரிபாதிக்கு, மஞ்சி அனுப்பிய சட்டசபையைக் கலைக்கப் பரிந்துரை செய்த கடிதம் குறித்து ஆளுநர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசிப்பார் என்று தெரிகிறது. ஆனால் அந்த பரிந்துரை முறைப்படி இல்லை என்பதால் மத்திய அரசு அவசரம் காட்டாது என்றே தெரிகிறது.
இந்த பின்னணியில்தான் மஞ்சி டெல்லிக்கு வந்துள்ளார். இன்று மாலை அவர் பிரதமரைச் சந்தித்த பின்னர் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது. அனேகமாக அவர் பாஜகவில் இணையக் கூடும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications