மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்..கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் மத்திய அரசு..அமைதி திரும்புமா
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பதற்றம் தணிந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜிரிபம் மாவட்டத்தில் மைத்தேயி இன மக்கள் சிலர் மாயமான நிலையில், அவர்கள் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டதே இதற்கு காரணமானது. இதனால் பாதுகாப்பிற்காக மத்திய அரசு, கூடுதலாக 90 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பைரன் சிங் முதல்வராக இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்குக் கடந்த இரு ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கடந்த மே மாதம் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த மோதலில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் முழுமையாக பதற்றம் தீர்ந்தபாடில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அங்குச் சற்று அமைதி திரும்பியிருந்தது. ஆனால், அங்கு மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது.
ஜிரிபம் மாவட்டத்தில் மைத்தேயி இன மக்கள் சிலர் மாயமான நிலையில், அவர்கள் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டதே மீண்டும் வன்முறை ஏற்பட காரணமாக அமைந்தது. குறிப்பாக மணிப்பூரின் ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு கூடுதல் வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி மணிபூருக்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். இது குறித்து மணிப்பூர் மாநில தலைமை பதுகாப்பு ஆலோசகர் கூறியதாவது:- கூடுதலாக 90 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பிற்கு வர உள்ளனர். இதில் குறிப்பிட்ட அளவு வீரர்கள் இம்பாலுக்கு ஏற்கனவே வருகை தந்துவிட்டனர். பதற்றமான பகுதிகளுக்கு வீரர்கள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இன்னும் சில நாட்களில் அனைத்து பகுதிகளிலும் வீரர்கள் சென்றடைந்து விடுவார்கள். காவல்துறையின் ஆயுத கிடங்கில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் சுமார் 3 ஆயிரம் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்பு படை, ராணுவம், அசாம் ரைபிள்ஸ், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, சஸ்ஹஸ்த்ரா சீம பால் ஆகிய படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். ஏதாவது பிரச்சினை எழுந்தால் அதை ஒருங்கிணைந்து தீர்வு காண்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications