ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விருப்பத்தை மீறி அமித்ஷாவை தலைவராக்கினார் மோடி?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அமித்ஷாவை அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல் இல்லாமலேயே பிரதமர் மோடிதான் தலைவராக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதாவின் தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சரானார். அப்போது முதலே பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார் என்ற விவாதம் தொடர்ந்தது.

பாஜக தலைவராக அமித்ஷா
நரேந்திர மோடியின் வலதுகரமான அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்கொடுக்கப்படாத நிலையில் அவரைத்தான் பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டது. அதேபோல் நட்டா உள்ளிட்ட சிலரது பெயர்களும் அடிபட்டன.

அமித்ஷாவை தலைவராக்க தயக்கம்
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைப் பொறுத்தவரையில் சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் சிக்கியிருக்கும் அமித்ஷாவை தவிர்ப்பது என்ற முடிவில் இருந்ததாக கூறப்பட்டது. அதே நேரத்தில் தமக்கு குஜராத் அரசியலிலும் தேசிய அரசியலிலும் வலதுகரமாக இருக்கும் அமித்ஷாவைத்தான் தலைவராக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார்.

ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம்
பாஜகவைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமே இறுதி முடிவெடுக்கக் கூடியது. இதற்கு முன்னர் அத்வானி, நிதின்கட்காஅரி ஆகியோரை பாஜக தலைவர் பதவியில் இருந்து தூக்கியதும் ராஜ்நாத்சிங்கை தலைவராக்கியதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமே. பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானியை ஆர்.எஸ்.எஸ். தூக்கியது குறித்து அப்போது அமெரிக்காவுக்கு டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் அனுப்பிய குறிப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மேலாதிக்கம் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது.

மோடி கையில் பாஜக
தற்போதும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக அமித்ஷாவுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சித்தது. அமித்ஷாவை தலைவராக்கினால் ஒட்டுமொத்த பாஜகவுமே மோடி என்கிற தனி மனிதர் கையில் போய்விடும் என்பது ஆர்.எஸ்.எஸ். கருத்து.

ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி
ஆனாலும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் விருப்பங்களைப் புறந்தள்ளிவிட்டு தனது சகாவான அமித்ஷாவையே தலைவராக்கி பாரதிய ஜனதா கட்சியையே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் மோடி. இதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications