“பப்ளிசிட்டிக்காக எழுதவில்லை முட்டாள்களே”... ஆவேசமான அமிதாப்!
மும்பை: விளம்பரத்துக்காக நேபாள நிலநடுக்கம் பற்றி இணையத்தில் எழுதவில்லை என பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் விளக்கமளித்துள்ளார்.
அமிதாப்பச்சன் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி வருவதுடன், தனக்கென்று தனியான வலைப்பூ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் எழுதியிருந்தார் அமிதாப். இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், சில இணைய பதிவர்கள், ‘அமிதாப் பச்சன் தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ள நேபாள நிலநடுக்கம் குறித்து எழுதுகிறார்' என விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது போல், சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

முட்டாள்கள்...
அவர்கள் (ஒரு சில இணைய பதிவர்கள்) நான் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இப்படி எழுதுவதாகக் கூறுகிறார்கள். முட்டாள்கள்! இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்.

கோபம் கொப்பளிக்கிறது...
இன்று என் வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்கிறது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தயக்கமில்லை...
கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரங்களில் அதனை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்வதற்கு நான் தயங்குவதில்லை.

மன்னியுங்கள்...
இது சரியானது அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் ஒருபோதும் அப்படியான வார்த்தைகளைப் பிரயோகிப்பவனாக இருந்ததில்லை. இனியும் இருக்க மாட்டேன். மன்னியுங்கள். மறந்து விடுங்கள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications