பனாமா வரி ஏய்ப்பு விவகாரம்... என்ன சொல்கிறார் அமிதாப் பச்சன்?
மும்பை: பனாமா வரி ஏய்ப்பு விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், தான் ஒழுங்காக வரி செலுத்துபவன் என்றும் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
பனாமாவை மையமாகக் கொண்ட, 35 நாடுகளில் கிளைகள் வைத்துள்ள மொசாக் ஃபனெஸ்கா என்ற நிறுவனம், சமீபத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் 500 முக்கிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக செய்துள்ள முதலீடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இதில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் உரிமையாளர் கேபி சிங், இந்தியா புல்ஸ் புரமோட்டர் சமீர் கெலாட் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதில் அமிதாப்பச்சன் 1993 - ம் ஆண்டு 4 நிறுவனங்களின் இயக்குனராக நியமிக்கப்பட்டதாகவும் இதேபோல் 2005-ம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அமிக் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பதிவு செய்யப்பட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
பனாமா உள்ளிட்ட சில நாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்கெனவே மறுத்து விட்டார்.
இந்த விவாகரம் தொடர்பாக அமிதாப் பச்சன் இதுவரை அமைதியாக இருந்தார்.
ஆனால் இன்று தனது மவுனத்தை கலைத்து ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஊடகத்தில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நிறுவனத்தையும் எனக்குத் தெரியாது. சீ பல்க் ஷிப்பிங் நிறுவனம், லேடி ஷிப்பிங் லிட், ட்ரெஷர் ஷிப்பிங் லிட், மற்றும் டிராம்ப் ஷிப்பிங் லிட்., ஆகிய நிறுவனங்கள் எதிலும் இயக்குனராக நான் இருந்ததில்லை. என்னுடைய பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
நான் வரிகளை ஒழுங்காகச் செலுத்தியுள்ளேன். வெளிநாடுகளில் செலவழித்த தொகைக்கும் நான் வரி செலுத்தியே வந்துள்ளேன். வெளிநாட்டுக்கு நான் அனுப்பிய தொகைகளுக்கும் நான் வரியை செலுத்தியுள்ளேன். ஊடகத்தில் வெளியான செய்தி அறிக்கையிலும் கூட என் பக்கத்தில் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததாக கூறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.