"அம்மா" உணவக இட்லிக்கு கர்நாடகத்து கடத்தல் அரிசியா?
உடுப்பி: கர்நாடகத்தில் கடந்த பாஜக ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட அன்ன பாக்யா திட்டத்திற்கு ஒதுக்கப்படும் அரிசி, இடைத்தரகர்களால் தமிழகத்திற்குப் பெருமளவு ரகசியமாக கொண்டு செல்லப்படுகிறது. இதை அரசும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இந்த அரிசியிலிருந்துதான் தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இட்லி தயாரிக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சரும், உடுப்பி- சிக்மகளூர் லோக்சபா எம்.பியுமான ஷோபா கரன்ட்லஜே குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அரிசிக் கடத்தல் குறித்து கர்நாடக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டும் கூட அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உடுப்பியில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறியதாவது:
அம்மா இட்லிக்கு அன்ன பாக்யா அரிசி
கடந்த பாஜக ஆட்சியின்போது அன்ன பாக்யா திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக ஒதுக்கப்படும் அரிசி தற்போதைய காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்குக் காரணமாக தமிழகத்திற்குப் போய்க் கொண்டுள்ளது. இந்த அரிசியிலிருந்துதான் அம்மா இட்லியை தயாரித்து விற்கிறது தமிழக அரசு.
இடைத் தரகர்களின் கடத்தல்
சில இடைத் தரகர்கள் அன்ன பாக்யா அரிசியை தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் கடத்துகிறார்கள்.
எல்லைக்குப் போனால் பிடிக்கலாம்
கர்நாடக - தமிழக எல்லையில் போய் நின்றால் எத்தனை லாரிகளில் அரிசி போகிறது என்பதை நேரடியாகவே கண்டுபிடிக்கலாம்.
அமைதி காக்கும் அரசு
இந்தக் கடத்தல் குறித்து கர்நாடக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் கூட அவர்கள் கண்டும் காணாமலும் உள்ளனர்.
பஜ்ரங் தளம் பட்டாசு வெடித்தது தவறு
யாருடைய மரணத்தையும் நாம் தனிப்பட்ட துவேஷங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. நாங்கள் மறைந்த யு.ஆர். அனந்தமூர்த்தி மீது மதிப்பு வைத்துள்ளோம். எங்களது தலைவர்கள் பலரும் அனந்தமூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அனந்தமூர்த்தியின் மறைவைத் தொடர்ந்து மங்களூரில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அது தவறு. ஆனால் அவர்கள் எங்களது ஆட்கள் அல்ல என்றார் ஷோபா.