கொடுமை… ஆம்புலன்ஸ் இல்லாமல் அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் து. மூர்த்தி மரணம்
ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் அலிகார் பல்கலைக்கழகத் பேராசிரியர் து. மூர்த்தி மரணமடைந்துள்ளார்.
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் து.மூர்த்தி, ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 6 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு உயிரிழந்துள்ளார். வேலூரில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
64 வயதான பேராசிரியர் து.மூர்த்தி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் துறையின் தலைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

அலிகார் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை டெல்லி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், பேராசிரியரை டெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் முறையாக செய்துத் தரவில்லை. ஆம்புலன்ஸ் இல்லை என்றும் முறையாக படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது என்ற நிலையில் பேராசிரியர் மூர்த்தி இருந்த நிலையில், சிறப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்துள்ளனர். ஆனாலும், ஆம்புலன்ஸ் வந்தபாடில்லை.
டெல்லிக்கு பேராசிரியரை மாற்ற வேண்டும் என்று சொல்லி 4 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்று ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவர் முகம்மது அஸ்லாம் குற்றம்சாட்டியுள்ளார்.
6 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததால், கடந்த 28 ஆண்டுகளாக பணி செய்த அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்திலேயே பேராசிரியர் மூர்த்தியின் உயிர் பிரிந்தது. இதற்கு, மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்கே காரணம்.
இதனையடுத்து, ஆம்புலன்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற காலதாமதம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் அமைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications