மோடி எபெக்ட்: வாரணாசியில் ரூ.200 கோடி முதலீட்டில் ஆலை தொடங்கிய 'அமுல்'
ஏற்கனவே குஜராத் பால் கூட்டுறவு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் 'அமுல்' நிறுவனம் இந்த புதிய ஆலையில் முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர்கள் பால் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
இது தற்போது அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வரும் பால் உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதுகுறித்து, ஆசியாவின் மிகப்பெரிய பால் யூனியனான 'பனாஸ் டெய்ரி' நிறுவனத்தின் தலைவர் பார்தி படோல் கூறியதாவது:
200 கோடி முதலீடு
''நாங்கள் இந்த புதிய ஆலைக்கு ரூ.200 கோடியை முதலீடு செய்துள்ளோம். இதற்கான இடத்தை வாரணாசி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கார்கியானிவ் தொழிற்பேட்டை பகுதியில் உத்தரபிரதேச தொழில் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து தேர்வு செய்துள்ளோம். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன.'' என்றார்.
விவசாயிகளுக்கு நல்ல விலை
''இந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக உ.பி. இருந்தாலும், அமைப்பு சார்ந்த நிறுவனங்களிடமிருந்து 1 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளை சுரண்டும் நிலை அங்கு உள்ளது. ஆனால் இந்த 'அமுல்' கூட்டுறவு அமைப்பு மூலம் உ.பியில் உள்ள பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நல்ல விலையை பெறுவார்கள்'' என்று 'அமுல்' தெரிவித்துள்ளது.
300 ஏக்கர் நிலம்
மோடிக்கு எதிராக பேசிவரும், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்வும், அவரது சமாஜ்வாதி கட்சியும் குஜராத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள 'அமுல்' நிறுவனத்திற்கு 30 ஏக்கர் நிலத்தை வழங்கியிருப்பதுதான் இதில் வியப்பூட்டும் செய்தி.
லக்னோ,கான்பூரிலும்
வாரணாசியை போன்றே லக்னோ மற்றும் கான்பூரிலும் ஆலைகளை துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக பால், தயிர் மற்றும் வெண்ணெய் தயாரிக்கவும், பிறகு ஐஸ் கிரீம், மற்றும் இதர பால் பொருட்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.