"ஜஸ்ட் மிஸ்" ஆன தமிழகத்தின் நித்யஸ்ரீ... சோனியின் ”ஜூனியர் சிங்கர்” ஆனார் ஒடிசாவின் அனன்யா!
மும்பை: ஒடிசாவைச் சேர்ந்த அனன்யா நந்தா என்ற சிறுமி சோனியின் இந்த வருடத்திற்கான இரண்டாவது சீசன் குரலிசைப் போட்டியான "இந்தியன் ஐடியல் ஜூனியர்" போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
14 வயதான இந்தச் சிறுமி நகீத் அப்ரான் மற்றும் தமிழகத்தின் நித்யஸ்ரீ வெங்கட்ரமணனை பின்னுக்குத் தள்ளி கோப்பையையும், 10 லட்ச ரூபாய் பரிசுப் பணத்தையும் வென்றுள்ளார்.
ஸ்ரேயா கோஷலும், அர்ஜீத் சிங்கும்தான் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும், முன்னாள் இசையமைப்பாளர் ஆனந்தாஜீதான் அவருடைய லக்கி சார்மாம்.
பிரமாண்ட இறுதிச் சுற்று:
சோனி டிவியின் மிகப் பிரம்மாண்டமான இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. சோனாக்ஷி சின்ஹா, விஷால் டட்லானி, சலீம் மெர்ச்சண்ட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தமிழகத்தின் செல்லக் குரல்:
இந்த பைனலில் அனன்யா, நகீத், நித்யஸ்ரீ ஆகியோர் இறுதிச் சுற்று வரை வந்து பங்கேற்றனர். இதில் நித்யஸ்ரீ தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி. தொடக்கம் முதலே அசத்தலாக பாடி வந்தார்.
முதல் தமிழ்க் குரல்:
இந்தப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட முதல் தமிழகச் சிறுமி நித்யஸ்ரீதான். முற்றிலும் இந்திப் பாடல்கள் மட்டுமே இதில் இடம் பெற்றன. நித்யஸ்ரீயும் இந்திப் பாடல்களை அவ்வளவு அருமையாக பாடினார்.
சத்ருகன் சின்ஹா:
இறுதிப் போட்டியின்போது, பிரபல அரசியல்வாதியும், முன்னாள் நடிகரும், சோனாக்ஷியின் தந்தையுமான சத்ருகன் சின்ஹாவும் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
பரிசை வென்ற அனன்யா:
13 குழந்தைகளுடன் தொடங்கி நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசியாக பைனைலில் அனன்யா இந்த டிராபியினை தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.