ஜெ.க்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யுங்கள்.. ஹைகோர்ட்டில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம்
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் விசாரணைக்கு தேவையான கூடுதல் வாதங்களை எழுத்துப்பூர்வமாக அன்பழகன் தரப்பு இன்று கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலும் கர்நாடக ஹைகோர்ட்டில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். அவரது நியமனத்தை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கருத்து
அதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் முன்னிலையான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், பவானி சிங் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பவானி சிங் நியமனம் செல்லாது என்று அறிவித்தாலும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தனர்.

அன்பழகனுக்கு அனுமதி
மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்திருந்தனர். மேலும், கர்நாடக ஹைகோர்ட்டு நீதிபதி சிறப்பு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையிலும் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க எவ்விதமான தடையும் இல்லை என்று தெரிவித்தனர்.

பவானிசிங் நியமனம் செல்லாது
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் பவானிசிங் ஆஜரானது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே எழுத்துப்பூர்வமாக அன்பழகன் தரப்பு கர்நாடக ஹைகோர்ட்டில் கூடுதல் வாதங்களை சமர்ப்பிக்கலாம் என்று, மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாக்கல் செய்தார் அன்பழகன்
இந்நிலையில் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, அன்பழகன் சார்பில் கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரிடம் எழுத்துப்பூர்வ இறுதிவாதம் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 81 பக்கம் கொண்டதாக அந்த வாதம் இருந்தது.

தண்டனை தாருங்கள்
அதில், 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது வாங்கிய சம்பளம் ரூ.26 மட்டுமே. ஆனால், அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியுள்ளது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கான செலவு தொகைகள், ஜெயலலிதா வங்கி கணக்கில் இருந்து சென்றுள்ளது. மேலும் சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதனிடையே, நாளைக்குள், கர்நாடக அரசு தனது தரப்பு வாதத்தை தாக்கல் செய்யுமா என்பது உறுதியாகவில்லை. அவர்கள் தாக்கல் செய்யாமல் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications