பயங்கர ஆயுதங்கள் சகிதம் முதல் முறையாக வாக்களிக்க வந்த அந்தமான் ஆதிவாசிகள்!!
போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் கற்காலத்தை சேர்ந்த ஆதிப் பழங்குடியின மக்களில் கடைசி பிரிவினரான சோம்பென் இனத்தவர் நேற்று முதல் முறையாக தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
அந்தமான் நிக்கோர்பார் தீவுகளில் சோம்பென், ஜாரவா, அந்தமானியர்கள், ஆங்கே, சென்டினெலஸ்சி ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் சோம்பென் இனத்தினர் கற்காலத்தை சேர்ந்த பழங்குடியினர். கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புபடி இவர்களின் மொத்த எண்ணிக்கையே 229 என்று தெரியவந்துள்ளது.

அந்தமானின், கிரேட் நிகோபார் எனப்படும் அடர்ந்த உள்ளடங்கிய காட்டுப்பகுதியில் இந்த இனத்தினர் வசிக்கின்றனர். இவ்வின மக்கள் வெளி இடங்களுக்கு வருவதில்லை. நாகரீகத்தின் எந்த அடையாளமும் இல்லை. அதேபோல் தங்கள் இனத்தினரை தவிர பிறருடன் பழக்கம் வைத்து கொள்வதும் இல்லை.
இந்நிலையில் இந்த ஆதி பழங்குடியினருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி சோம்பென் இனத்தை சேர்ந்தவர்களுடன் பேசி அவர்களுக்காகவே பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

நேற்று அங்கு நடந்த தேர்தலில் சோம்பென் இனத்தைச் சேர்ந்த 60 பேர் தங்கள் வாக்குகளை வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப் பதிவு செய்த ஆதிவாசிகள் எப்போதும் தாங்கள் வைத்திருக்கும் வேட்டையாடுதலுக்கான பயங்கர ஆயுதங்களுடன் வந்து வாக்களித்தனர். இதனால் தேர்தல் பணிகளில் இருந்தவர்கள் பெரும் பீதியுடன் பணியாற்றினர்.












Click it and Unblock the Notifications