அடசாமீ.. அடிச்சாரே பாரு பல்டி... பாஜக கூட்டணியில்தான் இருப்பேன்.. நாயுடுவுக்கும் ஆதரவு..பவன் கல்யாண்
விசாகப்பட்டினம்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தமது ஜனசேனா கட்சி தொடர்ந்து நீடிக்கும்; பாஜக கூட்டணியில் இருந்து தாம் விலகுவதாக அறிவிக்கவில்லை என நடிகர் பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளிடையேயான பிரதான மோதல். இம்மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. பாஜக எப்படியாவது காலூன்றிவிட முயற்சிக்கிறது. இந்த பந்தயத்தில் நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியும் இணைந்திருக்கிறது.

சந்திரபாபு நாயுடுவின் முயற்சி தோல்வி: ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா தேர்தலும் நடைபெறும். இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனசேனா கட்சி இடம் பெற்றிருக்கிறது. முன்னதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி மீண்டும் பாஜக கூட்டணியில் இடம் பெற முயற்சித்தது. ஆனால் ஆந்திரா பாஜகவில் மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தெலுங்குதேசம் கட்சியை பாஜக தமது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கவில்லை. சந்திரபாபு நாயுடு கைது சம்பவத்தின் போதும் கூட பட்டும் படாமல் கண்டனம் தெரிவித்து ஒதுங்கிக் கொண்டது பாஜக.
தெலுங்குதேசம்- ஜனசேனா கூட்டணி: ஆனால் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தெலுங்கு தேசம் கட்சியுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடுவை சிறையில் போய் சந்தித்த பின்னர், தெலுங்குதேசம் கட்சியுடனும் ஜனசேனா கூட்டணி வைப்பதாக பவன் கல்யாண் அறிவித்தார். அத்துடன் 32 சட்டசபை தொகுதிகளை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக வதந்தி: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவன் கல்யாண், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. அண்மையில்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழ்நாட்டில் அதிமுக விலகியது. இப்போது அண்டை மாநிலமான ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சியும் பாஜகவை கழற்றிவிட்டது அக்கட்சிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்பட்டது.
பொய் பிரசாரம் செய்யும் ஜெகன் கட்சி: ஆனால் இதனை தற்போது பவன் கல்யாண் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண் கூறியதாவது: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜனசேனா விலகிவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. வரும் தேர்தலில் ஆந்திராவின் வளர்ச்சி நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணிகள் தொடர்பான சரியான முடிவை அவர்கள் எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.
பாஜக ஆசியுடன் தெலுங்குதேசம் கூட்டணி: நான் வாழும் வரை பாஜகவின் ஆசியுடனும் ஆதரவுடனும் தெலுங்குதேசம்- ஜனசேனா கூட்டணி தொடரும் என விரும்புகிறேன். ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை வீழ்த்துவது ஒன்றை மட்டும் இலக்காக வைத்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவெடுத்தால் அதை அந்த கூட்டணியி தலைவர்களிடம்தான் முதலில் சொல்வோம். இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது.
சனாதன தர்மம்: நான் ஒரு இந்துவாக இருந்தும், சனாதன தர்மத்தில் நம்பிக்கை கொண்டாலும், மற்ற எல்லா மதங்களையும் நான் மதிக்கிறேன். என் சனாதன தர்மம் அதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஆகையால் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது என் பேச்சை நிறுத்திக் கொண்டேன்.
ஜெகனை வீட்டுக்கு அனுப்புவோம்: ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக நான் உழைக்க விரும்புகிறேன். நான் முதல்வர் ஆக வேண்டும் என நீங்கள் விரும்பினால் ஆம். ஆனால் அது கடவுளின் கருணை மற்றும் மக்களின் ஆதரவைப் பொறுத்தது. உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன். ஜனசேனா, தெலுங்குதேசம் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரு கட்சியினருமே கடந்த கால தவறுகளை மன்னித்து தேர்தலில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜெகன் மோகன் ரெட்டியை அவரது வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications