அன்று சிந்து... இன்று ஸ்ரீகாந்த்... விளையாட்டுன்னா என்னா ஆர்வம் நாயுடுகாருக்கு!
மேடையில் பேட்மிண்டன் விளையாடுவதில் சாதனை படைத்தவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஐதராபாத் : ஒலிம்பிக், ஆஸ்திரேலிய ஓபன் என வெற்றியை குவித்து வரும் ஆந்திர வீரர்களுக்கு நடத்தும் பாராட்டு விழாவில் அவர்களுடன் சில நிமிடங்கள் ஜாலியாக பேட்மிண்டன் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தெலுங்கானாவை சேர்ந்த 21 வயதான பி.வி.சிந்து பெற்றார்.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஹைதராபாத் திரும்பியதும், அவருக்கு ஆந்திர அரசு பாராட்டு விழா நடத்தியது. சிந்துவிற்கு சந்திரபாபு நாயுடு ரூ.3 கோடி காசோலையுடன், அமராவதியில் ஆயிரம் சதுர அடியில் வீடு ஒன்று வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

சிந்துவுடன் பேட்மிண்டன்
சிந்துவிற்கு பாராட்டு விழா நடத்திய போது முதல்வர் சந்திரபாபு நாயுடு சில நிமிடங்கள் சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். பொதுமக்கள் அதிகாரிகள் முன்னிலையிலேயே சந்திரபாபு நாயுடு துள்ளி குதித்து விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு பாராட்டு
இந்நிலையில் ஆஸ்திரேலியன் ஓபன், இந்தோனேஷிய பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்களுக்கான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விழாவில் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை வழங்கியதோடு, அமராவதியில் ஆயிரம் சதுர அடியில் வீடு, குரூப் 1 அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஸ்ரீகாந்த்துடன் விளையாட்டு
இந்த பாராட்டு விழா தொடங்குவதற்கு முன்னர் சந்திரபாபு நாயுடு கிடாம்பி ஸ்ரீகாந்த்துடன் சில நிமிடங்கள் மேடையில் பேட்மிண்டன் விளையாடினார். சாம்பியன் ஸ்ரீகாந்த் பந்தை வீச அதை தான் கையில் வைத்திருந்த பேட்டால் திருப்பி அடித்து மகிழ்ந்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆர்வம்
இளம் தலைமுறையினருக்கு விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே பரிசுகள் அறிவிக்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். எனினும் உலக அளவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுடன் விளையாடுவதில் நாயுடுகாரருக்குத் தான் எத்தனை ஆர்வம் பாருங்கள்.












Click it and Unblock the Notifications