கருணைக் கடலாக மாறிய ஜெகன்... நாள்பட்ட நோயாளிகளுக்கு ரூ. 10,000 உதவித்தொகை
அமராவதி: நாள்பட்ட வியாதிகளாலும், தீராத நோய்களாலும் பாதிக்கப்பட்டோருக்கு மாதம் தோறும் ரூ.10,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
இந்த திட்டம் நீண்டகாலமாக நோய்களில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ஏழை எளியோரின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
நோயாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்ததற்காக ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஜெகன் மோகன் ரெட்டியை கொண்டாடி தீர்க்கின்றனர்.

புதிய சிந்தனை
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது புதுமையான திட்டங்கள் மூலம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறார். புதிய சிந்தனைகள் மூலம் அரசு நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்களை வகுத்து வருகிறார்.

நீண்டகால நோயாளிகள்
தலசீமியா, அனீமியா, உள்ளிட்ட நாள்பட்ட வியாதிகளில் சிக்கி மருத்துவம் பார்க்க முடியாமல் அவதியுறும் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காக புதிய திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் படி நீண்டகால நோயாளிகளுக்கு அவர்களின் மருத்துவச் செலவுக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

ஆதாரம் தேவை
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் நோயாளிகள், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உரிய சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும், போதிய மருத்துவ மற்றும் பரிசோதனை ஆதாரங்கள் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.

நோயாளிகள் நெகிழ்ச்சி
இதேபோல் நரம்பு மண்டல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் முடங்கி கிடப்பவர்களுக்கும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ரூ.5,000 உதவித் தொகையை அறிவித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. இதனால் தீராத நோய்களில் சிக்கி தவிக்கும் நோயாளிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சி
ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நோயாளிகள் பற்றியும் சிந்தித்து அவர்களுக்காக உதவித் தொகையை அறிவித்து கருணைக் கடலாக மாறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.












Click it and Unblock the Notifications