பதற்றத்தில் நடிகை ரோஜா- சட்டசபை தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்குமா? கிடைக்காதா? ஜெகன் முடிவு என்ன?
விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் தாமும் இருக்கிறோமா? இல்லையா? என்கிற பதற்றத்தில் அமைச்சர் நடிகை ரோஜா இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

முழு வீச்சில் களத்தில் ஜெகன்: ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்; மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆந்திரா தேர்தலுக்கான 35 வேட்பாளர்களையும் 2 கட்டங்களாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த 35 வேட்பாளர்கள் பட்டியலில் 13 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்படவில்லை. இது ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் புகைச்சலை கிளப்பி இருந்தாலும் இதனை எதிர்கொள்ளும் வகையிலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ரோஜாவுக்கு சீட் கிடைக்குமா?: இந்த நிலையில் அமைச்சரும் நடிகையுமான ரோஜாவுக்கு நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்கிற கேள்வியும் பரபரப்பும் மீண்டும் எழுந்துள்ளது. நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என சில மாதங்களாகவே செய்திகள் பரவி வருகின்றன.
சீட் மறுப்பா? ரோஜா சொன்னது என்ன?: அண்மையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த நடிகை ரோஜா, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்பது எல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை. நான் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் போர் வீரர்களில் ஒருவராக இருக்கவே விரும்புகிறேன். ஜெகன் மோகன் ரெட்டிக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யவும் தயாராக இருக்கிறேன். தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் கவலைப்படமாட்டேன். எங்களுடைய இலக்கு 175 தொகுதிகளிலும் வெல்வதுதான். அதற்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: அதே நேரத்தில் நகரி தொகுதியில் எனக்கு மீண்டும் சீட் கிடைக்காது என தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் பொய் பிரசாரத்தை செய்து வருகின்றன. நான் மக்களுக்காக பாடுபட்டு வருகிறேன். இத்தகைய பொய் பிரசாரங்களை மக்கள் பார்த்து கொள்வார்கள் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
நடிகை ரோஜாவின் அரசியல்: 1998-ம் ஆண்டு நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி தலைவர் பதவியும் கிடைத்தது. 2004 சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ரோஜா. 2009-ம் ஆண்டு சந்திரகிரி தொகுதியிலும் ரோஜா தோல்வியடைந்தார். பின்னர் தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொடங்கிய போது அவருடன் கை கோர்த்தார் ரோஜா. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் முதல் முறையாக வென்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் நகரியில் 2-வது முறையாக வெற்றி பெற்றார் ரோஜா. அவருக்கு கடந்த ஆண்டு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி வழங்கினார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.












Click it and Unblock the Notifications