அப்பாவோ கூலித்தொழிலாளி – மகனோ இன்று 79 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் கெட்டிக்காரன்!
கம்மம்: ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் ரூபாய் 79 லட்சம் சம்பளத்தில் அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேக் ஜமாலுதீன். இவரது மனைவி ரகீமா பேகம். இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர்.

சேக் ஜமாலுதீன் கிரானைட் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் ரூபாய் 5 ஆயிரம் தான் வருமானம் பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி தையல் வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.
இவர்களது மகன் நசீர்பாபாவுக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தனது ஏழ்மை நிலையிலும் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற சேக்ஜமாலுதீன் அவனை படிக்க வைத்தார்.
நசீர்பாபா 10 ஆம் வகுப்பு வரை நவோதயா பள்ளியில் இலவசமாக படித்தான். 10 ஆம் வகுப்பு தேர்வில் 600 க்கு 587 மதிப்பெண் பெற்று மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்வு பெற்றான்.
இதன் மூலம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீசைதன்யா பள்ளியில் பிளஸ் 2 வகுப்பை இலவசமாக தொடர முடிந்தது. பிளஸ் 2 வில் 1000 க்கு 969 மதிப்பெண் பெற்றான்.
பின்னர், ஐ.ஐ.டி நுழைவு தேர்வில் 239 ரேங்க் பெற்றான். கல்லூரி நிர்வாகத்தின் உதவி மூலம் கான்பூர் ஐ.ஐ.டி.யில் அவனுக்கு இடம் கிடைத்தது. அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 ஆவது ஆண்டு படித்து வருகிறான்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனம் கல்லூரியில் வளாக தேர்வு நடத்தியது. இதில் நசீர்பாபா தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ரெட் உட் சிட்டியில் உள்ள நிறுவனத்தில் அவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 79.18 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கி உள்ளது.
நசீர்பாபாவுக்கு கிடைத்த வேலை அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது. நசீர்பாபாவை அந்த கிராமமே கொண்டாடியது. "எனது மகன் மூலம் எங்கள் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தது" என்று சேக் ஜமாலுதீன் மகிழ்ச்சி பொங்க கூறினார்.
இதுபற்றி நசீர்பாபா கூறும் போது, "எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆகியோர் உதவியால் தான் என்னால் படிக்க முடிந்தது. எனது குடும்பத்தையும், என் சகோதரிகளையும் நல்லபடியாக வாழ வைப்பேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications