’அண்ணன்’ ஜெகன் போலீஸின் கைதுக்கு பயந்து காங்கிரஸ் ஆபிஸில் தூங்கிய ஒய்எஸ் ஷர்மிளா-பரபர ஆந்திரா வீடியோ
அமராவதி: ஆந்திரா முதல்வரும் தமது அண்ணனுமான ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக தலைமை செயலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்த அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, போலீசார் வீட்டுக் காவலில் வைக்க முயற்சிப்பதைத் தடுக்க காங்கிரஸ் அலுவலகத்திலேயே தூங்கிய வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல், ஆந்திரா சட்டசபை தேர்தல் தேதி மார் 8, 9-ந் தேதிக்குப் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக, காங்கிரஸ் ஆகியவை களத்தில் உள்ளன. ஆந்திராவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது. ஆனால் ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை அதிரடியாக நியமித்தது டெல்லி மேலிடம். இதனைத் தொடர்ந்து சாம்பலில் இருக்கும் காங்கிரஸை உயிர்ப்பித்துவிடுவதற்காக ஷர்மிளா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஜெகன் மோகன் கட்சியில் அதிருப்தி இருக்கும் பலரும் ஷர்மிளா தலைவரான பின்னர் காங்கிரஸுக்கு திரும்பவும் தொடங்கி இருப்பது அக்கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்து வருகிறது.
இந்த பின்னணியில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தை ஷர்மிளா அறிவித்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#WATCH | Andhra Pradesh: APCC chief YS Sharmila Reddy spent the night in her party office in Vijayawada to avoid house arrest. (21.2) pic.twitter.com/JyWSnM9EYS
— ANI (@ANI) February 22, 2024
இதனால் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் போராட்டத்தைத் தடுக்க அவரை வீட்டுக் காவலில் வைக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முயற்சிகளை கையில் எடுத்தது. ஷர்மிளாவின் வீட்டுக்கு வெளியே போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. ஆனால் ஷர்மிளாவோ வீட்டுக்கே போகவில்லை. இந்த நிலையில் தாம் காங்கிரஸ் அலுவலகத்திலேயே தங்கி தூங்கியதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ஷர்மிளா. ஜெகன் மோகன் ரெட்டி போலீசார் தம்மை வீட்டுக் காவலில் சிறை வைக்க 1,000க்கும் மேற்பட்ட போலீசாரையும் தடுப்புகளையும் குவித்துள்ளதால் தாம் காங்கிரஸ் அலுவலகத்திலேயே தங்கிவிட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ஷர்மிளா.












Click it and Unblock the Notifications