சர்வதேச செம்மரக்கட்டை கடத்தல்காரர்கள் 12 பேரின் பெயர்கள் வெளியீடு... 4 பேர் தமிழர்கள்
திருப்பதி : செம்மர கட்டை கடத்தலில், சர்வதேச அளவில் தொடர்புடைய, 12 பேரின் பெயரை, ஆந்திர அரசு, வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில், சித்துார், கடப்பா, நெல்லுார், பிரகாசம் மாவட்டங்களில் வளர்ந்துள்ள, செம்மர கட்டையை வெட்டி, சீனா, தாய்லாந்து, மியான்மர், நேபாளம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துகின்றனர். மும்பை, கொல்கத்தா, சென்னை, துாத்துக்குடி, விசாகப்பட்டினம் வழியாக, கடல் மார்க்கத்தில், செம்மரகட்டை கடத்தப்பட்டு வருகிறது.
பின் அதை, உருவ பொம்மையாக மாற்றி, சீனாவில் ரகசிய கண்காட்சி அமைத்து, ஒரு கோடி ரூபாய் முதல், மூன்று கோடி ரூபாய் வரை, விற்பனை செய்கின்றனர். அதில், முக்கிய பங்கு வகிப்பவர், சென்லீ ஹூஹா, என்ற, சீன பெண் கடத்தல்காரர்.
தற்போது, மேற்கு வங்கம், பீகார், உத்தரகண்ட் வழியாக சீனா, பூடான், மியான்மர், பாகிஸ்தானுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வருகின்றனர். செம்மர கடத்தலில், சர்வதேச அளவில் தொடர்புடைய, 12 பேரின் பெயரை, ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. இவர்களில், சாகுல் அமீது, சென்லீ ஹூஹாவின் புகைப் படங்களை, ஐதராபாத் போலீசார், நேற்று, வெளியிட்டனர்.
அந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அலிபுத்தீன், பாஸ்கரன், பார்த்திபன், மாதி, குமார் ஆகி 4 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரையும், கைது செய்ய, ஆந்திர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.