தெலுங்கானா மசோதாவை நிராகரித்தது ஆந்திர சட்டசபை!!
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான மசோதாவை ஆந்திர மாநில சட்டசபை இன்று நிராகரித்துவிட்டது.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான மசோதாவை ஆந்திர சட்டசபையில் விவாதித்து அனுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி அனுப்பி வைத்திருந்தார். இதற்கான காலக்கெடு இன்று வரை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தெலுங்கானா மசோதாவுக்கு ஆந்திர சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் மாநில சட்டசபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மேலும் 3 வாரம் அவகாசம் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதம் எழுதி இருந்தார்.
இந் நிலையில் இன்று காலை மாநில சட்டசபை கூட்டம் தொடங்கியதும், தெலுங்கானா மற்றும் சீமாந்திரா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சட்டசபையை ஒரு மணி நேரத்துக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
பின்னர் சபை கூடிய போது ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு முடிவில் தெலுங்கானா மசோதாவை நிராகரிப்பதற்கான வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதால் மசோதா நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சட்டசபை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications