முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு.. நேராக முகத்தை தாக்கியதால் பரபரப்பு.. பிரசாரத்தில் ஷாக்
அமராவதி: ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. நேராக முகத்தில் கல் தாக்கியதில் அவர் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. கண் புருவத்தின் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது.

இந்த 2 தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு என்பது அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பேருந்து யாத்திரை மூலம் அவர் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று பேருந்து மூலம் விஜயவாடாவில் ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்தார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேருந்தில் நின்றபடி பேசி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் மீது கல்வீசப்பட்டது. கூட்டத்தில் இருந்த வேகமாக வந்த கல் அவரது முகத்தை தாக்கியது. இதில் இடது கண்ணின் புருவத்தின் மேல்பகுதியில் கல் பலமாக தாக்கியது. இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது இதையடுத்து அங்கிருந்த டாக்டர் உடனடியாக அவருக்கு சிகிச்சையளித்தார்.
பேருந்துக்குள் வைத்து ஜெகன்மோகன் ரெட்டியின் காயத்தை பரிசோதித்த டாக்டர் அதில் Band Aid ஒட்டினார். அதன்பிறகு ஜெகன்மோகன் ரெட்டி கையெடுத்து கும்பிட்டப்படி பேருந்தில் புறப்பட்டு சென்றார். ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசியது யார்? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் ரெட்டியை காண வந்த தொண்டர்கள் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆந்திராவை பொறுத்தமட்டில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. மேலும் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். இதனால் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications