ஆந்திராவில் 'அண்ணா கேண்டீன்' - என்.டி.ராமராவ் பெயரில் தொடங்குகிறார் சந்திரபாபுநாயுடு!
ஹைதராபாத்: தமிழகத்து அம்மா உணவகத்தைப் போல ஆந்திராவில் என்.டி.ராமராவ் பெயரில் 'அண்ணா கேண்டீன் தொடங்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாநகராட்சிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆந்திராவிலும் மலிவு விலை உணவகம்
இந்த திட்டத்தை ஆந்திராவிலும் செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டது.

ஆந்திர அமைச்சர் ஆய்வு
இது தொடர்பாக ஆந்திர பொது விநியோகத்துறை அமைச்சர் பரிடாலா சுனிதா தலைமையிலான குழு தமிழ்நாட்டுக்கு வந்து அம்மா உணவகத்தை பார்வையிட்டனர். அங்கு தயாரிக்கப்பட்ட உணவை ருசி பார்த்தனர். இது தொடர்பாக அறிக்கையை முதல்வர் சந்திரபாபுநாயுடுவிடம் சமர்ப்பித்தனர்.

சந்திரபாபுவிடம் அறிக்கை
இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தலைமையில் ஹைதராபாத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

அண்ணா கேண்டீன் திறக்க முடிவு
இக்கூட்டத்தின் முடிவில் "அண்ணா கேண்டீனை" தொடங்குவதற்கான துணை குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆந்திராவில் என்.டி.ராமராவை "அண்ணா" என்று பொதுமக்கள் அழைப்பர். இதனால் அவரது பெயரையே உணவகங்களுக்கு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் அறிவிப்பு
இது குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் வெளியிடப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications