கொரோனா... வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஆந்திர அரசு உருவாக்கிய சூப்பர் கருவி
அமராவதி: கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை காரணமாக சந்தேகத்திற்கு உரியவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஆந்திர மாநில அரசு பிரத்யேகமாக கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்த வீட்டைவிட்டு செல்கிறாரா அல்லது இதுவரை வேறு எங்கு சென்றார் என்பதை கண்காணித்து வருகிறது.
Recommended Video
ஆந்திர மாநில அரசு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட தனித்துவமான இந்த கருவியினை கோவிட் 19 எச்சரிக்கை கண்காணிப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் முதல் கருவியாகும்.
தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் மொபைல் டவர் சிக்னல்களின் உதவியுடன் கொரோனா வைரஸ் பிரச்சனையால் வீட்டில் தனிமைப்படுத்துதலின் கீழ் வைக்கப்பட்டுள்ள 25,000 க்கும் மேற்பட்டவர்களைக் கண்காணிக்க ஆந்திர அதிகாரிகள் இக்கருவியை பயன்படுத்துகின்றனர்.

தனிமைப்படுத்துதல்
இந்த 25,000 பேரின் மொபைல் எண்களையும் அதிகாரிகள் ஏற்கனவே வைத்திருக்கிறார்கள். அவர்கள் தற்போது தங்கி உள்ள இருப்பிடத்தை அந்தந்த நபரின் இருப்பிடமாக எடுத்துக் கொண்டால், அந்த நபர் 100 மீட்டர் சுற்றளவைத் தாண்டி இருக்கும் இடத்திலிருந்து பயணித்தால் மாவட்ட அதிகாரிகளை எச்சரிக்க கருவி பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் வீட்டில் தனிமைப்படுத்துதலின் விதிமுறைகளை மீறுவது உடனே கண்காணிக்கப்படுகிறது.

எச்சரிப்பார்கள்
இதன் மூலம் எச்சரிக்கையைப் பெற்றதும், மாவட்ட அதிகாரிகள் மீறுபவரிடம் பேசிவிட்டு திரும்பி வீட்டுக்குள் செல்லும்படி கேட்கிறார்கள். மீறுபவர் அவ்வாறு செய்ய மறுத்தால், அவர்களுக்கு காவல்துறை மூலம் உரிய நடவடிக்கையை மாநில அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள். இதில் செல்போனை ஸ்விட் ஆப் செய்வது உள்ளிட்ட எந்த கோல்மாலும் செய்ய முடியாத வகையில் அறிவுறுத்தல்களை தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கி உள்ளது. எனவே இந்த வழியில், விதிமுறைகளை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.

எச்சரிக்கை மண்டலம்
இரண்டாவதாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மொபைல் டவர் சிக்னல்களைப் பயன்படுத்தி அவர்கள் இதுவரை சென்ற அனைத்து பயண வரலாறுகளையும் கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கிறார்கள் . குறைந்த பட்சம் அந்த நபர் 15 நிமிடம் இருந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் 2-3 கி.மீ சுற்றளவில் எச்சரிக்கை மண்டலங்களை அமைக்கவும், தூய்மை படுத்தவும் அதிகாரிகளுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர உள்ளூரில் போலீசும் இருப்பதால் அவர்கள் வீட்டை விட்டு வந்தால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

மற்ற மாநிலங்களும் ஆர்வம்
கொரோனாவால் ஒருவேளை அவர் பாதிக்கப்பட்டது உறுதியானால் அவர் சென்ற அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆந்திராவில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால், தெலுங்கானா, பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களும், இதே மாதிரியை பின்பற்றுவதற்கும், அதே கருவிகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் முயல்கின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications