இரட்டை இலையை மீட்க லஞ்சம்: தினகரனின் 5 வங்கிக் கணக்கு மூலம் பணப் பரிமாற்றமா?
இரட்டை இலை சின்னம் பெற லஞ்ச பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் தினகரனின் வங்கிக் கணக்கில் இருந்து பெரிய தொகை கைமாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்ச பேரம் பேசிய விவகாரத்தில் பணப்பரிமாற்றத்திற்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் மூலம் இந்திய தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க.அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.
லஞ்ச பணம் கொடுக்க உடந்தையாக இருந்த டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டுவதற்காகவும், யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரிப்பதற்காகவும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டி.டி.வி.தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். அவர்களை சென்னை கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை தினகரன் டெல்லி அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் பணப்பரிமாற்றத்திற்கு உதவியதாக டெல்லி விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்ட ஹவாலாஏஜென்ட்டுடன் நேரில் வைத்து தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் கைது செய்யப்பட்ட ஹவாலா புரோக்கர் நரேஷிடம் இருந்து ரூ. 50 லட்சத்தை பறிமுதல் செய்து உள்ளனர். விசாரணையின் அடிப்படையிலேயே இந்த பணமானது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணம் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சமாக கொடுக்க இடைத்தரகர் சுகேஷிடம் கொடுக்க கொண்டுவரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே தினகரனின் வங்கி கணக்கு விபரங்களை அளிக்கவும் டெல்லி போலீஸ் உத்தரவிட்டு உள்ளது. தினகரனின் எஸ்பிஐ வங்கி கணக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியது.
டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் விபரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் இதன் மூலம் பெரிய அளவிலான பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.