'அரசியலில் நுழைவது பாவம் அல்ல': கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே வாழ்த்து
ரலேகான் சித்தி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, ‘அரசியலில் நுழைவது பாவம் அல்ல' எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரேயின் இயக்கத்தில் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றுவந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஹசாரேவை தன் குரு என சொல்லி வரும் கெஜ்ரிவால், தனிக்கட்சி தொடங்கியபோது அதை கடுமையாக எதிர்த்தார் அன்னா ஹசாரே.

'அரசியலே சாக்கடை ஆகிவிட்டது. அதில் விழுந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் தேற மாட்டார்' என்று கருத்து கூறி வந்தார்.
ஹசாரேவின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், 'நமது நாட்டின் அரசியல் அமைப்பில் முதல் மாற்றம் நிகழாத வரையில் வேறு எந்த மாற்றமும் ஏற்பட்டுவிட முடியாது' என்ற கொள்கையில் உறுதியாய் இருந்தார்.
அதற்கேற்ப, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில், கட்சி ஆரம்பித்த 6 மாத காலத்தில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.
இந்த பதவியேற்பு விழாவுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தபோதும், தனிப்பட்ட காரணங்களையொட்டி பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டெல்லியின் 7வது முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஹசாரே வாழ்த்து செய்தி அனுப்பினார். 'அரசியலின் உயரிய நோக்கமே-நாட்டுக்கு சேவை செய்வது தான்' என்று அந்த வாழ்த்து செய்தியில் அன்னா ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'இந்த பதவியின் மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களுக்கு நன்மை புரிந்தால், தற்போது அரசியலில் இருக்கும் மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும். அரசியலில் நுழைவது பாவம் அல்ல என்ற மன நிலையும் பொதுமக்களிடயே உருவாகும்' என்றார்.












Click it and Unblock the Notifications