காஷ்மீர் சோகம் காயும் முன்னே உ.பி.யில் மற்றொரு பயங்கரம்... 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை
உத்தரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமியை 18 வயது இளைஞர் ஒருவர் கடத்திக் கொண்டு அவரை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
Recommended Video

ஏட்டா: காஷ்மீர் கத்துவா சம்பவம் வெளியே வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மற்றொரு 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் ஏட்டா கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு தம்பதி தனது 8 வயது குழந்தையுடன் வந்துள்ளனர். தம்பதி மணமகள் வீட்டாருக்கு நெருக்கமான சொந்தமாவர்.
இதனால் திருமண வேலைகளில் இருவரும் பிஸியாக இருந்துள்ளனர். அப்போது அவர்களது 8 வயது மகள் சோனு அங்கு ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1.30 மணிக்கு சில திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

18 வயது இளைஞர்
மேலும் ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம் என திருமணம் களைகட்டியது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அங்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார்.

கழுத்தை நெரித்து
நீண்ட தூரத்தில் உள்ள பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு சிறுமியை இழுத்து சென்ற அந்த இளைஞர் அவரை பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். இதனிடையே சிறுமியை காணாது பெற்றோர் தேடினர். எனினும் அவர் கிடைக்காததால் ஊர்மக்களுடன் சேர்ந்து கிராமத்தில் தேடினர்.

இளைஞர் கைது
அப்போது ஒரு கட்டட வேலை நடைபெற்று வரும் வீட்டில் சென்று பார்த்தனர். அங்கு சிறுமியின் சடலத்தை வைத்துக் கொண்டு அந்த இளைஞர் மது குடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து புகாரின் பேரில் அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

3-ஆவது சம்பவம்
காஷ்மீரில் கத்துவா கிராமத்தில் 8 வயது சிறுமி மிகக் கொடூர முறையில் கொல்லப்பட்ட சம்பவம் வெளியே வந்த ஓரிரு தினங்களுக்குள் சூரத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் சடலம் காணப்பட்டது. அதில் 86 காயங்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் மிகக் குறுகிய நாட்களிலேயே மூன்றாவதாக மற்றொரு 8 வயது சிறுமி உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications