கடும் பனிப்பொழிவு... குளிரில் நடுநடுங்கும் டெல்லி... 24 ரயில்கள் லேட்!
டெல்லி: டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவியதால், அங்கிருந்து 24 ரயில்கள் காலதாமதமாக மற்ற இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றன.
டெல்லியில் வரும் 7ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வருகிறது.
இந்நிலையில், காலை நேரங்களில் தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக இன்று காலை பனிப்பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை அளவான 9.6 டிகிரி செல்சியஸூக்கும் கீழ் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இந்த அளவு 11.3 செல்சியஸாக இருந்தது.
காலை மணி 8.30 ஆனபோதும், காற்றில் ஈரப்பதம் 95 சதவீதமாகவே இருந்தது. கடுமையான பனிமூட்டம் காரணமாக, அங்கு சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு எதையும் பார்க்க முடியாத அளவிற்கு வெண்மையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட 24 ரயில்கள் தாமதமாக கிளம்பிச் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.