இரவில் வெளியாட்கள் வீட்டில் நுழைந்தால் தலையை வெட்டுங்க.. மற்றொரு திரினமூல் தலைவர் சர்ச்சை பேச்சு!
கொல்கத்தா: திரினமூல் காங்கிரஸ் எம்.பி தபஸ் பாலின் பாலியல் பலாத்காரம் பேச்சு குறித்த சர்ச்சை முழுவதுமாக அடங்குவதற்குள்ளாகவே, தற்போது அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி பிரச்சினைக்குரிய விதத்தில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பியும், நடிகருமான தபஸ் பால், மேற்கு வங்காளம் கிருஷ்ணா நகரில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய வீடியோ காட்சியில், மேற்கு வங்க எதிர்க்கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டை கடுமையாக தாக்கிப் பேசி இருந்தார்.
அப்போது, "திரினமூல் காங்கிரஸ் தொண்டர்களது குடும்ப பெண்கள் மீது எதிர்க்கட்சியினர் கை வைத்தால் சும்மா இருக்க மாட்டேன். எனது இளைஞர் படையை மார்க்சிஸ்டு தொண்டர்களின் வீடுகளுக்கு அனுப்பி அவர்களது குடும்பப் பெண்களை மானபங்கம் செய்யும்படி சொல்வேன்" என சர்ச்சைகுரிய கருத்தைத் தெரிவித்தார்.
தபஸ் பாலின் இந்தப் பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தேசிய மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில், தபஸ்பாலின் மனைவி நந்தினி, தனது கணவரின் பேச்சுக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தபஸ் பாலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த ஆரூப் சக்ரவர்த்தி என்ற அக்குரா மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பாஜகவிற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
சமீபத்தில் பக்குரா அருகே உள்ள ஒரு கிராமத்தில் திரினமுல் காங்கிரஸாருக்கு, பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. அது பற்றி நேற்று ஒரு கிராமத்தில் அருப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் தான் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று கலவரத்தை தூண்டி விடுகிறார். கிராமங்களில் நமது கட்சிக்காரர்களின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் வெளியாள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால், பெண்களை தாக்கினால் அவரின் தலையை வெட்டி சிரச்சேதம் செய்யுங்கள்.
என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைபவர்களை என் மெய்க்காப்பாளர்கள் அப்படித்தான் செய்வார்கள். என்ன ஆகுமோ என பயப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அரூப்பின் இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications