போராட்டங்களுக்கு இடையே.. வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து தலைவர் கைது.. என்னதான் நடக்குது?
டாக்கா: வங்கதேசத்தில் இந்துமதத் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் ஏற்பட்டது. இதற்கிடையே சிறையில் உள்ள ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாசை பார்க்க சென்ற மேலும் ஒரு இந்து மத தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. அவர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வங்கதேசத்தில் பதற்றம் முழுமையாக தணிந்தபாடில்லை.

குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முகமது யூனுஷ் தலைமையிலான அரசு உறுதியளித்தது. ஆனாலும் இச்சம்பவங்கள் கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. வங்கதேசத்தின் 170 மில்லியன் மக்களில் சுமார் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர்.
அதேவேளையில், இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் பேரணி நடந்த நிலையில், அதில் வங்கதேச தேசியக் கொடிக்கு மேல் காவி கொடியை ஏற்றியதாக தாஸ் மீது குற்றஞ்சாட்டி தேச துரோக வழக்குப் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாஸின் கைதை தொடர்ந்து வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் துறைமுக நகரமான சட்டோகிராம் உட்பட பல்வேறு நகரங்களில் மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்தது. சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதற்கு அங்குள்ள இஸ்கான் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு அமைதியான வாழும் சூழலை வங்கதேச அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்று இஸ்கான் வலியுறுத்தியது. வங்கதேசத்தில் சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்மோய் கிருஷ்ண தாஸை சிறைக்கு சென்று பார்க்க திட்டமிட்டு இருந்த இந்து மத தலைவரான ஷியாம் தாஸ் பிரபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாரண்ட் எதுவும் இன்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications