அடுத்த பகீர்! முதலில் இரண்டு மரணங்கள்.. இப்போது ஒடிசாவில் மாயமான புதின் எதிர்ப்பாளர்! தொடரும் மர்மம்
புபனேஷ்வர்: பிறந்த நாளை கொண்டாட வந்த ரஷ்ய எம்பி பாவெல் அன்டோவ் மற்றும் அவரது நண்பர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் புதினை கடுமையாக விமர்சித்து வந்த மற்றொரு ரஷ்ய நபரும் மாயமாகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ரஷ்யாவில் அசைக்கவே முடியாத தலைவராக உள்ளவர் புதின். இவர் கடந்த 2000கள் முதலே ரஷ்யாவின் அதிகார மிக்கவராக இருந்து வருகிறார். அங்கு நடக்கும் தேர்தல்கள் எல்லாம் சும்மா பெரியளவில் மட்டுமே இருக்கும்.
புதின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எப்போதும் வெல்வார்கள். மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். அப்படியே போட்டியிட்டாலும் அவர்களால் எந்தவொரு இடத்திலும் வெல்ல முடியாது.

ரஷ்யா
அந்தளவுக்குச் சர்வாதிகாரம் அங்கு இருக்கும். தன்னை எதிர்ப்பவர்களையும் இருக்கும் இடமே தெரியாமல் காலி செய்வதை புதின் வழக்கமாகக் கொண்டுள்ளார். புதின் குறித்த ரகசியங்களைத் தொடர்ந்து பொது வெளியில் கசியவிட்டு வந்த அலெக்ஸ் நவால்னி என்ற புதின் எதிர்ப்பாளர் மீது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும்போது கொலை முயற்சி நடந்தது. இதனால் அவர் உயிரே போகும் அபாயம் ஏற்பட்டது. இருப்பினும், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை தேறியது. இருந்த போதிலும், ஏதேதோ காரணங்கள் சொல்லி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தடுத்து உயிரிழப்புகள்
இந்த சூழலில் ரஷ்யாவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இந்தியாவில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதான பாவெல் அன்டோவ் தனது பிறந்த நாளை கொண்டாட மூன்று நண்பர்களுடன் இந்தியா வந்தார். அவர்கள் ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஹோட்டல் தங்கியிருந்தனர். அப்போது அவர்களில் விளாடிமிர் பிடெனோவ் (62) என்பவர் கடந்த 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன் பிறகு சில நாட்களிலேயே பாவெல் அன்டோவ்வும் 3ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

மற்றொருவர் மாயம்
புதின் மற்றும் உக்ரைன் போரைக் கடுமையாக விமர்சித்து வந்த பாவெல் அன்டோவ், இப்படி மர்மமான முறையில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், இத்துடன் இந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. அவர்களுடன் வந்த மற்றொரு நபரும் இப்போது மாயமாகியுள்ளார். அவரை ஒடிசா போலீசார் தேடி வருகின்றனர். இப்போது மாயமாகியுள்ள அந்த நபர் வெளிப்படையாகவே உக்ரைன் போரை எதிர்த்து வந்தவர். போருக்கு எதிர்ப்பு தெரிவித்து புபனேஷ்வர் ரயில் நிலையத்தில் அவர், "நான் ரஷ்ய அகதி, நான் போருக்கு எதிரானவன், நான் புதினுக்கு எதிரானவன், நான் வீடற்றவன், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்ற பலகையுடன் அவர் நின்று கொண்டிருந்தார்.

புதின் எதிர்ப்பாளர்
அதை அப்போதே சிலர் ஃபோட்டோ எடுத்திருந்தனர். இந்த ஃபோட்டோக்கள் ரஷ்ய எம்பி பாவெல் அன்டோவ் உயிரிழந்த பிறகு டிரெண்டானது. அந்த நபர் தான் இப்போது திடீரென மாயமாகியுள்ளார். ரஷ்ய அதிபருக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் இப்படி அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து அல்லது மாயமாகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்துகளா அல்லது கொலை சம்பவங்களா என்பது போன்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில்
இப்போது மாயமான அந்த நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புபனேஷ்வர் ரயில் நிலையத்தில் புதினுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட பலகையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போதே அதிகாரிகள் சிலர் அவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். அவரது விசா உள்ளிட்ட மற்ற ஆவணங்கள் சரியாக இருந்ததால், எச்சரித்துவிட்டு அனுப்பிவிட்டனர். இருப்பினும், அவரால் ஆங்கிலத்தில் நன்கு பேச முடியாததால் அவரிடம் இருந்து போதிய தகவல்களை வாங்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் இருந்து கூடுதல் தகவல்களைச் சேகரித்திருந்தால், இப்போது மாயமான போது தேடுதல் வேட்டைக்குப் பெரியளவில் உதவியிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய எம்பி பாவெல் அன்டோவ்
முன்பு உயிரிழந்த ரஷ்ய எம்பி பாவெல் அன்டோவ் ரஷ்யாவில் இறைச்சி தொழிலதிபர் ஆவர். ரஷ்யாவில் அதிக இறைச்சி உற்பத்தி செய்யும் "விளாடிமிர் ஸ்டாண்டர்ட்" என்ற நிறுவனத்தை இவர் தொடங்கி நடத்தி வந்தார். அவர் விளாடிமிர் பிராந்தியத்தின் சட்டசபை துணைத் தலைவராக இருந்தார். விளாடிமிர் பிராந்தியத்தின் விவசாயம், இயற்கை மேலாண்மை மற்றும் சூழலியல் தொடர்பான கொள்கை முடிவை எடுக்கும் குழுவின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். அங்கு அதிகம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகளில் ஒருவராகவே இந்த பாவெல் அன்டோவ் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications