அஸ்ஸாமை துண்டிப்போம் என பேச்சு.. ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் பீகாரில் கைது
டெல்லி: சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின் போது அஸ்ஸாமை இந்தியாவில் இருந்து துண்டிப்போம் என பேசிய ஜே.என்.யூ. மாணவர் ஷர்ஜீல் இமாம் பீகார் மாநிலத்தில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான ஷாகீன் பாக் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஷர்ஜீல் இமாமும் ஒருவர்.
சில நாட்களுக்கு முன்னர் இப்போராட்டத்தில் பேசிய ஷர்ஜீல் இமாம், 5 லட்சம் மக்கள் ஒன்று திரண்டு போராடினால் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து துண்டித்துவிடலாம் என்றார். அவரது இந்த பேச்சுக்கு எதிராக அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசல பிரதேச மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் ஷர்ஜீல் மீது தேசதுரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லி மாநிலங்களிலும் ஷர்ஜீல் இமாமுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனையடுத்து ஷர்ஜீல் இமாமை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
JNU Student Sharjeel Imam has been arrested from Jahanabad,Bihar by Delhi Police. Imam had been booked for sedition by Police. More details awaited. pic.twitter.com/7zFmWFbWIf
— ANI (@ANI) January 28, 2020
இதன் ஒருபகுதியாக டெல்லி போலீசார் நேற்று மும்பை. பாட்னா உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். இந்நிலையில் பீகாரின் ஜெகனாபாத்தில் ஷர்ஜீலின் சகோதரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஷர்ஜீலின் இருப்பிடம் குறித்து விசாரிக்கப்பட்டது.
சிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா
இந்நிலையில் ஜெகனாபாத்தில் மற்றொரு இடத்தில் ஷர்ஜீல் இமாமை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் விசாரணைக்காக டெல்லி அழைத்து வரப்படுகிறார்.
மும்பை ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர் ஷர்ஜீல். பின்னர் டெல்லி ஜே.என்.யூவில் ஆராய்ச்சி படிப்புக்காக சேர்ந்தார். ஏற்கனவே உத்தரப்பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் அரசுக்கு எதிராக பேசியதற்காக போலீசார் ஷர்ஜீல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.