கன்னடர்களுக்கு எதிராக சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்! போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
பெங்களூர்: சென்னையில், கன்னடர்களுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.
தென் சென்னையின் பல பகுதிகளிலும் ஆயிரம் விளக்கு விஜய் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில், ஜெயலலிதாவை உடனே விடுதலை செய், இல்லையென்றால் தமிழகத்தில் வாழும் கன்னடர்களை சிறைபிடிப்போம் என்ற மிரட்டல் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த போஸ்டரில் நிர்வாகிகள் கலைராஜன், பா.வளர்மதி, குமார் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இது கன்னடர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி பிரச்சினையின்போது பெங்களூரில் தமிழர்களும், தமிழகத்தில் கன்னடர்களும் தாக்கப்பட்டனர். எனவே இந்த செய்தியை பார்த்ததும், பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி போன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தொடர்பு கொண்டு, கன்னடர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். கன்னடர்கள் தாக்கப்பட்டால் பெங்களூரில் சட்டம் ஒழுங்கு கெடும் வாய்ப்புள்ளதாக தனது கவலையை ரெட்டி, ஜார்ஜிடம் தெரிவித்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும், போஸ்டர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜார்ஜ் உறுதியளித்தார்.
இதையடுத்து சர்ச்சைக்குறிய போஸ்டர்கள் சென்னையில் அகற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications